பதிவு செய்த நாள்
02 மே2016
00:18
புதுடில்லி : ‘இந்தாண்டு, உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை, 8.5 – 9.5 சதவீதம் வளர்ச்சி காணும்’ என, இந்திய தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏறுமுகத்தில் உள்ளது. சாதகமான பருவமழை, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவதால் உண்டாகும் பணப்புழக்கம் போன்ற பல அம்சங்கள், பயணிகள் வாகன துறையின் வளர்ச்சிக்கு உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக கார் வாங்குவோர் எண்ணிக்கை உயரும். அதுபோல, பழைய வாகனங்களை விற்று விட்டு, புதிய வாகனங்களை வாங்குவதும் அதிகரிக்கும். கடந்த இரண்டு நிதியாண்டுகளாக சிறிய, நடுத்தர மற்றும் பன்முக பயன்பாட்டு கார்கள் அதிக அளவில் அறிமுகமாயின. அவை, பயணிகள் வாகன துறையின் விற்பனை வீழ்ச்சி அடையாமல் பாதுகாத்தன; இத்துறையின் வளர்ச்சி, ஏற்றத் தாழ்வின்றி, 21 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
பன்முக பயன்பாட்டு வாகனங்கள் பிரிவில், சிறிய கார்களின் விற்பனை வளர்ச்சி, 63 சதவீதமாக உயர்ந்தது. இந்தாண்டு, பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய, ‘பிராண்டு’களில் ஏராளமான கார்களை அறிமுகப்படுத்த உள்ளன. அதனால், குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில், ஒட்டுமொத்த பயணிகள் வாகன சந்தை, சிறப்பான வளர்ச்சி காணும்.அதே சமயம், வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு சோதனையும் காத்திருக்கிறது. புதிய கார்களை வடிவமைப்பதற்கான செலவினங்கள் அதிகரிப்பு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான கூடுதல் வரி போன்றவை, வாகன தயாரிப்பு நிறுவனங்களின் லாப வரம்பை குறைக்கக் கூடும்.
கார் விற்பனையை அதிகரிக்க அளிக்கப்படும் தள்ளுபடி சலுகைகள், போட்டி காரணமாக, கார் விலையை உயர்த்த முடியாத நிலை, மூலப்பொருட்கள் விலை உயர்வால், உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற பிரச்னைகளையும், பயணிகள் கார் தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என, இக்ரா வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னேற்றம்கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், பயணிகள் வாகனவிற்பனை, 8 சதவீதம் அதிகரித்து, 20 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில், பன்முக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை, முந்தைய நிதியாண்டை விட, 6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5.86 லட்சமாக அதிகரித்துள்ளது.– இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|