பதிவு செய்த நாள்
02 மே2016
08:04
பி2பி லெண்டிங் என சொல்லப்படும் இணையதளம் மூலம் தனிநபர்கள் கடன் வழங்கவும், கடன் பெறவும் வழி செய்யும் நிறுவனங்களை முறைப்படுத்த, வரைவு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் நிதித்துறையில் புதிய சேவைகளும், புது வகை நிறுவனங்களும் அறிமுகமாகி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. டிஜிட்டல் வாலெட்கள் பண பரிவர்த்தனையில் புதிய வசதியை கொண்டு வந்திருக்கின்றன என்றால், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கடன் வழங்குவதில் ஈடுபடும் இணைய நிறுவனங்கள் பிரபலமாகி வருகின்றன.
புதிய வகை நிறுவனங்கள் இந்த வகையில், பி2பி லெண்டிங் எனப்படும் இணையம் மூலம் கடன் வழங்க வழி செய்யும் நிறுவனங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. பியர் 2 பியர் லெண்டிங் என்பதன் சுருக்கமே பி2பி லெண்டிங் என குறிப்பிடப்படுகிறது.இந்த வகை நிறுவனங்கள் இணையதளம் மூலம் தனிநபர்களுக்கு இடையே கடன் வழங்கும் மேடையாக செயல்பட்டு வருகின்றன. கடன் தேவை உள்ளவர்களையும், கடன் அளிக்க முன்வருபவர்களையும் இந்த தளங்கள் இணைக்கின்றன. தனிநபர்கள் இவற்றில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, கடன் வழங்கலாம்; கடன் பெறலாம். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தலையீடு இல்லாமல் இவை செயல்படுகின்றன.
இணையம் மூலம் சாமானியர்களிடம் இருந்து நிதி திரட்ட உதவும் கிரவுட்பண்டிங் தளங்கள் போல இவையும் பிரபலமாகி கொண்டிருக்கின்றன. பேர்சென்ட், லெண்டென் கிளப் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பிரிவில் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும், 20 புதிய நிறுவனங்கள் இப்பிரிவில் உருவாகியுள்ளன. இணைய கடன் மேடைகளாக செயல்படும் இந்த நிறுவனங்கள் இதுவரை ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், இவற்றை முறைப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி, அண்மையில் வரைவு நெறிமுறைகள் கொண்ட அறிக்கையை வெளியிட்டு, இது தொடர்பாக கருத்துக்களை கோரியுள்ளது.
இணையம் மூலம் கடன் வழங்க வழி செய்யும் நிறுவனங்கள் வங்கி சாரா நிதி நிறுவனங்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், இவை குறைந்தபட்சம், 2 கோடி ரூபாய் முதலீடு கொண்டு இருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ள மற்ற முக்கிய வரைவு நெறிமுறைகள் வருமாறு:* பி2பி நிறுவனங்கள் சேவைகளை கடன் வழங்குபவர் மற்றும் கடன் பெறுபவரை இணைக்கும் வகையில் மட்டுமே செயல்பட வேண்டும். இவை வங்கியின் செயல்பாடுகளை பெறவோ, டிபாசிட் கோரவோ முடியாது* கடன் தொகை, கொடுப்பவரிடம் இருந்து பெறுபவருக்கு நேராக செல்ல வேண்டும்* வட்டி வருமானம் தொடர்பாக உத்தரவாதம் அளிக்க கூடாது* கடன் வழங்குவதில் வரையறை இல்லாமல் விரிவாக்கம் செய்ய முடியாது* கடன் வழங்குபவர்களுக்கும் வரம்பு உண்டு* இந்தியாவில் இவற்றுக்கான அலுவலகம் இருக்க வேண்டும்.
புதிய அங்கீகாரம் ரிசர்வ வங்கியின் வரைவு நெறிமுறைகள், இத்துறையை முறைப்படுத்தும் நடவடிக்கை யாக மட்டும் அல்லாமல் துறைக்கான அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது. இணையம் மூலம் கடன் வழங்க வழி செய்யும் நிறுவனங்களை, வங்கி சாரா நிதி நிறுவனம் அந்தஸ்து பெற வைப்பது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்த வகை நிறுவனங்கள் கடன் வழங்குவதற்கான மாற்று வழியாக அமையும் என்று ரிசர்வ் வங்கி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் நெறிமுறைப்படுத்தப்படும் போது, தற்போது வழங்குவதை விட பெரிய அளவில் கடன் வழங்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் இத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர். குறுகிய கால கடன் தேவை பெறுபவர்களுக்கு இவை பெரும் அளவில் உதவியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
வழக்கமான வங்கிகளிடம் கடன் பெற முடியாதவர்கள் மற்றும் அதிக வட்டிக்கு கடன் பெறுபவர்களுக்கும் இச்சேவை உதவியாக இருக்கும். இவை, சிறிய வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்களுக்கு போட்டியாக உருவாகலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், இவை முற்றிலும் வேறு வகையான வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதால் எந்த பாதிப்பும் இருக்காது என்ற கருத்தும் நிலவுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|