பதிவு செய்த நாள்
07 மே2016
07:48
மும்பை : தங்கம் விலை, கிடு கிடுவென உயர்ந்து வருவதால், இந்தாண்டு ‘அட்சய திருதியை’ தினத்தன்று, அதன் விற்பனை மந்தமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில், வளர்பிறை காலத்தில் வரும் திருதியை, ‘அட்சய திருதியை’ எனப்படுகிறது. அந்நாளில், தங்க நகை வாங்கினால், தொடர்ந்து தங்கம் சேரும் என, மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. அதனால், ஆண்டுதோறும் அந்நாளன்று தங்க நகை வாங்க, கடைகளில் கூட்டம் அலைமோதும். கடந்த ஆண்டு, சென்னையில், அட்சய திருதியை தினத்தன்று, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை நடைபெற்றது. இந்தாண்டு, வரும், 9ம் தேதி அட்சய திருதியை வருகிறது.
‘‘கடந்த ஆண்டை விட, இந்தாண்டு தங்க நகை விற்பனை வளர்ச்சி, மிதமாகவே இருக்கும்,’’ என, ஜி.ஜே.எப்., எனப்படும், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: அட்சய திருதியை அன்று, தங்க நகை விற்பனை நன்கு இருக்கும் என, சந்தையில் பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், தங்கம் விலை உயர்ந்துள்ளதால், பெரிய நகைகளை வாங்குவது குறையும். சங்கிலி, வளையல், மூக்குத்தி, மோதிரம் போன்ற, சிறிய நகைகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பும் என, தெரிகிறது.கடந்த வாரம், சென்னையில், 21,000 ரூபாய்க்கு விற்பனையான, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை, 22,824 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதுபோல, கடந்த பிப்ரவரியில், 26,930 ரூபாயாக இருந்த, 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை, 30,500 ரூபாயாக அதிகரித்துள்ளது. விலை உயர்வால், அட்சய திருதியை அன்று, தங்கம் விற்பனை மிதமாகவே இருக்கும் என, தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
‘‘அட்சய திருதியை அன்று, தங்கம் விற்பனை, 10 சதவீதம் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், விற்பனை மதிப்பு, கடந்த ஆண்டுக்கு நிகராக இருக்கும்,’’ என, ஜி.ஜே.எப்., முன்னாள் தலைவர் பச்ராஜ் பமல்வா தெரிவித்துள்ளார். ‘‘ஏற்கனவே பெறப்பட்ட, ‘ஆர்டர்’களின் அடிப்படையில், அட்சய திருதியை தினத்தன்று, திருமண நகைகளின் விற்பனை, விறுவிறுப்பாக இருக்கும். தங்க கட்டிகள், நாணயங்கள் ஆகியவற்றில் முதலீடு அதிகரிக்கும்,’’ என, உலக தங்க கவுன்சில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு துவக்கத்தில், சர்வதேச சந்தையில் சரிவில் இருந்த தங்கம் விலை, தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், உள்நாட்டில்தங்கம் விலை அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|