பதிவு செய்த நாள்
10 மே2016
07:25
மும்பை;திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறினாலும், அவை நடைபெறுவதென்னவோ பூமியில் தான். சிலர், விமானத்தில், நீருக்கடியில், பறக்கும் பலுானில் கூட, திருமணங்களை நடத்துகின்றனர். எத்தகைய திருமணங்களையும், சிறப்பாக நடத்திக் கொடுக்க, பல நிறுவனங்கள் தயாராக உள்ளன.
திருமணத்திற்கான, ‘பட்ஜெட்’ எவ்வளவு என தெரிவித்து விட்டால் போதும். திருமண அழைப்பிதழ் தயாரிப்பது முதல் கல்யாணம் முடித்து, மணமக்களை தேனிலவுக்கு அனுப்பும் வரை, அனைத்து ஏற்பாடுகளையும், இந்நிறுவனங்கள் பொறுப்புடன் செய்து தருகின்றன. இத்தகைய சேவையில், வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் தீவிரமாக களமிறங்கி, வெற்றி கண்டு வருகின்றன.
ஒரு திருமணத்திற்கு, விருந்தினர்களை அழைப்பது முதல், அவர்களுக்கு விருந்து உபசாரம் செய்து, தாம்பூலம் கொடுத்து அனுப்புவது வரையிலான பணிகளை, இந்நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இதற்கான கட்டணம், 2 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.திருமணத்திற்கு தேவையான அனைத்து சேவையாளர்களின் முகவரிகளை, பல வலைதள நிறுவனங்கள் வழங்குகின்றன. வெட்டிங்பிள்ஸ் வலைதளத்தில், திருமணங்களுக்கு மலர் அலங்காரம் செய்வோர், அறுசுவை உணவு தயாரிப்போர், மணமக்களை அழகுப் பதுமைகளாக மாற்றும் அழகு கலை வல்லுனர்கள் உள்ளிட்டோரின் முகவரிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த வலைதளத்தில் நுழைந்து, நம் தேவையை தெரிவித்து, நமக்கு ஏற்ற, சேவையாளரை தேர்வு செய்து கொள்ளலாம். ‘வெட்மிகுட், வெட்டிங் பிரிகேட்’ போன்ற வலைதளங்கள், முகவர்களின் முகவரியுடன், திருமணங்களை திட்டமிடும் வசதியையும் வழங்குகின்றன. முகவர்களிடம் பதிவுக் கட்டணமும், அவர்கள் திருமண வீட்டாரிடம் வசூலிக்கும் தொகையில், 10 சதவீதத்தையும், இந்நிறுவனங்கள் பெறுகின்றன.
வெட்மிகுட் வலைதளத்தில், 8,500 முகவர்கள் பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற முகவர்கள் மூலம், 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பு பெறுவதாக, ஆய்வு தகவல் கூறுகிறது. உலகளவில், பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்படாத, 4,000 – 5,000 கோடி டாலர் சந்தை மதிப்புடன், திருமண சேவை துறை திகழ்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|