பதிவு செய்த நாள்
12 மே2016
16:02
திருப்பூர்: ''ஆடைத் தயாரிப்புத்துறை யின் வளர்ச்சிக்காக, 12 சதவீத மாக உள்ள செயற்கை நுாலிழைக்கான கலால் வரியை, 6 சதவீதமாக குறைக்க, நிதித்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படும்,'' என, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ரேஷ்மி வர்மா தெரிவித்தார்.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), திருப்பூர் ஏற்று மதியாளர் சங்கம் சார்பில், 42வது இந்தியா நிட்பேர் (வசந்தம் மற்றும் கோடை காலம்) ஆயத்த ஆடை கண்காட்சி, திருப்பூர் ஐ.கே.எப்., கண்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது. மத்திய ஜவுளித்துறை செயலர் ரேஷ்மி வர்மா அரங்கை திறந்து வைத்துகூறியதாவது: உலக அளவில், 60 சதவீதம் செயற்கை இழை ஆடைகள் தேவை. 40 சதவீத அளவே பருத்தி இழை ஆடைகளின் தேவை உள்ளது. போட்டி நாடுகளை விட, நமது நாட்டில், வரியினங்கள் சற்று அதிகம். செயற்கை நுாலிழைக்கு, 12 சதவீதம் கலால் வரி விதிக்கப்படுகிறது.ஜவுளித்தொழிலின் எதிர்காலம், போட்டி சூழலை கருத்தில் கொண்டு, செயற்கை நுாலிழைக்கான கலால் வரியை, 6 சதவீதமாக குறைக்கவும், இறக்குமதி வரியை குறைக்கவும், நிதித்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படும். செயற்கை நுாலிழை உற்பத்திக்கு, ஊக்கம் அளிக்கப்படும்.ஐரோப்பிய நாடுகளுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சு நடக்கிறது; விரைவில் நல்ல பலன் கிடைக்கும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சிக்கப்படும். ஜி.எஸ்.டி., வரியை அமல்படுத்துவதில், சில சிக்கல்கள் உள்ளன. ஒருமுனை வரி விதிப்பு நடைமுறைக்கு வரும்போது, வரி சார்ந்த பிரச்னைகள் தீர்க்கப்படும். இவ்வாறு, ரேஷ்மி வர்மா கூறினார்.கூடுதல் செயலர் புஷ்பா, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல், பொது செயலாளர் சண்முகசுந்தரம், எஸ்.பி.ஐ., மண்டல மேலாளர் விஜயகுமார் ஆகியோர், குத்து விளக்கு ஏற்றினர். கண்காட்சி, நாளை மாலை நிறைவடைகிறது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|