பதிவு செய்த நாள்
13 மே2016
07:20
புதுடில்லி:‘‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு மாறாக நடக்கும் அமெரிக்கா மீது, விரைவில், 16 வழக்குகள் தொடுக்கப்படும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லிமென்டில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:சூரிய மின்சக்தி உட்பட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் சிலவற்றில், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை, அமெரிக்கா பின்பற்றுவதில்லை. குறிப்பாக, 1994ம் ஆண்டின், வரி மற்றும் வர்த்தக ஒப்பந்தம், மானியங்கள் மற்றும் எதிர்வரிகள், வர்த்தக முதலீட்டு ஒப்பந்தம் ஆகியவற்றில், உலக வர்த்தக அமைப்பின் விதிகள் மீறப்பட்டுள்ளன. இத்தகைய விதிமீறல்கள் தொடர்பாக, அமெரிக்கா மீது, விரைவில், உலக வர்த்தக அமைப்பில், 16 வழக்குகள் தொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பின்னணி என்ன?இந்தியாவில், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தி, மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்த வகையில், 2010, ஜனவரி, 11ல், ஜவஹர்லால் தேசிய சூரிய மின் உற்பத்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வரும், 2022க்குள், 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திறனை எட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மின்சாரத்தை உற்பத்தி செய்து, அரசுக்கு விற்கும் நிறுவனங்கள், குறிப்பிட்ட அளவிற்கு, உள்நாட்டில் தயாரிக்கப்படும், ‘சோலார் செல்’ மற்றும் ‘சோலார் தகடு’ ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, ‘இந்தியாவின் நிபந்தனை, சர்வதேச வணிக கொள்கைக்கு எதிரானது’ என, உலக வர்த்தக அமைப்பிடம் முறையிட்டது.
இந்த நிபந்தனையால், 2011 முதல், இந்தியாவிற்கான சோலார் செல் மற்றும் தகடுகள் ஏற்றுமதி, 90 சதவீதம் குறைந்து விட்டதாகவும், அமெரிக்கா புலம்பியது. இந்த வழக்கில், இந்தாண்டு பிப்ரவரியில், உலக வர்த்தக அமைப்பு, அமெரிக்காவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதில், ‘இந்தியாவின் நிபந்தனை, சர்வதேச வணிக விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை; அமெரிக்க நிறுவனங்களை பாதிப்பதாக உள்ளது’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து, உலக வர்த்தக அமைப்பில், இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை உள்நாட்டிலேயே பின்பற்றாத அமெரிக்கா மீது, இந்தியா, விரைவில் வழக்கு தொடுக்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|