பதிவு செய்த நாள்
14 மே2016
08:03
புதுடில்லி : தொலை தொடர்பு துறை நிறுவனங்களுக்கான அலைவரிசை ஒதுக்கீட்டிற்கு, சேவை வரி விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தனியார் துறையைச் சேர்ந்த, தொலை தொடர்பு நிறுவனங்கள், பயன்படுத்தாமல் வைத்துள்ள உபரி அலைவரிசையை பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த விற்பனைக்கும், சேவை வரி விதிக்கப்பட உள்ளது. இத்தகைய வரி விதிப்புகள் மூலம், ஓராண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், ‘சேவை வரி விதிப்பால், தொலை தொடர்பு நிறுவனங்களும், மொபைல் போன் சந்தாதாரர்களும் பாதிக்கப்படுவர்’ என, ‘அசோசெம்’ மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதன் விவரம்:போட்டி நிறைந்த தொலை தொடர்பு துறையில், நிறுவனங்கள், அலைவரிசை உரிமையை பெற, அதிக தொகையை செலவிட்டுள்ளன. வரி உயர்வு, சேவை விரிவாக்கம் போன்றவற்றால், அவற்றின் கடன் சுமை, ஏற்கனவே அதிகரித்துள்ளது. அதனால், நிறுவனங்களின் லாப வரம்பும் குறைந்து விட்டது. இந்நிலையில், கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அது, மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். நிறுவனங்கள், கூடுதல் வரிச் சுமையை சமாளிக்க, அழைப்பு கட்டணங்களை உயர்த்தும். இந்த சுமை, நாடு முழுவதும் உள்ள, தொலை தொடர்பு சந்தாதாரர்கள் தலையில் தான் விழும். ஆகவே, அலைவரிசை ஒதுக்கீட்டிற்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அதேசமயம், அலைவரிசை உரிமையை வணிக ரீதியில் விற்பதற்கு சேவை வரி விதிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|