பதிவு செய்த நாள்
19 மே2016
07:05
லாஸ் ஏஞ்செல்ஸ் : ‘‘இந்தியா, அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி, பொருளாதார நிர்வாகத்தை சீர்படுத்தினால், அதன் வர்த்தகம் மேலும் பெருகும்; அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான, அன்னிய நேரடி முதலீடுகளும் குவியும்,’’ என, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான, அமெரிக்க வெளியுறவு துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் யோசனை தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷா, கலிபோர்னியா பல்கலையில், மகாத்மா காந்தி நினைவு சொற்பொழிவு கூட்டத்தில், மேலும் பேசியதாவது: இந்தியாவில் சுலபமாக தொழில் துவங்குவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அறிவுசார் சொத்துரிமை நடைமுறைகளை செழுமைப்படுத்தி, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஒப்பந்தம்ஒரு நிறுவனம், வரிகளை முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடிய வகையில், வெளிப்படையான, திடமான நிறுவன வரிச் சட்டங்கள் அவசியம். வரி தொடர்பான பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணக்கூடிய செயல் திட்டங்களை, நடைமுறைபடுத்த வேண்டும். இவை தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஏற்கனவே எடுத்த சில நடவடிக்கைகளால், அன்னிய முதலீடுகள் இந்தியாவில் குவிந்து வருகின்றன. இருந்தபோதிலும், இந்தியா – அமெரிக்கா இடையிலான பரஸ்பர முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா அமலுக்கு வந்தால், முதலீட்டாளர்களுக்கு, இந்தியா மீது இன்னும் அதிக நம்பிக்கை ஏற்படும். இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பங்களையும், நிறுவனங்கள் கடைபிடிக்கும் உயர்தரமான நடைமுறைகளையும், இந்தியா பெறுவதற்கு துணை புரியும்.
கடந்த, 15 ஆண்டுகளில், இந்தியா – அமெரிக்கா இடையிலான பரஸ்பர வர்த்தகம், 10 ஆயிரம் கோடி டாலர் என்ற அளவில் தான் வளர்ச்சி கண்டுள்ளது. இதை, 50 ஆயிரம் கோடி டாலராக உயர்த்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதிப்பீட்டு காலத்தில், அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில், 30 ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்துள்ளன.
வேலைவாய்ப்புஇந்திய நிறுவனங்கள், அமெரிக்காவில், 1,100 கோடி டாலர் முதலீடு செய்து, ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. பரஸ்பர வர்த்தக வளர்ச்சியால், இரு நாடுகளும் பயன் பெறும். இந்தியாவில், திறனாளிகளின் தேவைக்கும், பங்களிப்பிற்கும் அதிக இடைவெளி உள்ளது. இதை குறைக்க, திறன் வளர்ச்சி திட்டங்கள் துணைபுரியும். அதன் மூலம், சர்வதேச போட்டியை சுலபமாக சமாளிக்கலாம்.மக்களின் மேம்பாட்டிற்கு ஏற்ப, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காண வேண்டும். அதற்கு, மதம், இனம், பாலின பாகுபாடுகளை கடந்து, மக்கள், சமூக, பொருளாதார, அரசியலில் பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|