பதிவு செய்த நாள்
20 மே2016
07:26
புதுடில்லி : குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி உண்ணும், ‘நுாடுல்ஸ்’ உணவுக்கு, பிரத்யேக தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை உருவாக்க, தேசிய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையமான, ‘எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,’ திட்டமிட்டு உள்ளது.
நெஸ்லே இந்தியா நிறுவனத்தின், ‘மேகி’ நுாடுல்சில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, ஈயம், ‘மோனோசோடியம் குளூட்டமேட்’ உள்ளதாக கூறி, அதன் விற்பனைக்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., 2015 ஜூன் மாதம் தடை விதித்தது. இந்த குற்றச்சாட்டை நெஸ்லே மறுத்தது. இது தொடர்பாக, நெஸ்லே தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட், ‘மூன்று தனியார் பரிசோதனை கூடங்களில், நுாடுல்ஸ் மாதிரிகளை ஆய்வு செய்ய வேண்டும்’ என்ற நிபந்தனையுடன், தடையை நீக்கியது. இதை எதிர்த்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், ‘அரசு அங்கீகாரம் பெற்ற பரிசோதனை கூடங்களில், நுாடுல்ஸ் மாதிரிகளை ஆய்வு செய்ய வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, கடந்த ஆண்டு நவம்பர் முதல், நெஸ்லே மீண்டும் நுாடுல்ஸ் விற்பனையை துவக்கியது.
இந்நிலையில், சர்ச்சைக்கு இடமற்ற வகையில், ஒரே சீரான தர நிர்ணய விதிமுறைகளின் கீழ், நுாடுல்ஸ் மாதிரிகளை ஆய்வு செய்வதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்த, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., திட்டமிட்டு உள்ளது. தற்போது, நுாடுல்ஸ் உட்பட, அனைத்து உடனடி உணவுப் பொருட்களுக்கும், பொதுவான தர நிர்ணய நடைமுறைதான் உள்ளது. அதனால், நுாடுல்சுக்கு மட்டும் பிரத்யேக தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளன.
இந்த தெளிவான விதிமுறைகள் மூலம், நுாடுல்சில் சுவைக்காக சேர்க்கப்படும், மோனோசோடியம் குளூட்டமேட் உள்ளிட்ட, மூலப்பொருட்களின் அளவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆய்வின் போது, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, கூடுதலாக இருப்பது தெரியவந்தால், நுாடுல்ஸ் விற்பனை தடை செய்யப்படும். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., முதன்முதலாக, ஒரு உணவுப் பொருளுக்கு மட்டும், பிரத்யேக தர அளவீட்டை நிர்ணயிப்பது, இதுவே முதன்முறை. விரைவில், புதிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, தேசிய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒருசில நிறுவனங்களின், ‘நுாடுல்ஸ், பாஸ்டா’ போன்ற உடனடி உணவுகளில், ‘மோனோசோடியம் குளூட்டமேட்’ இருந்தாலும், ‘எம்.எஸ்.ஜி., சேர்க்கப்படவில்லை’ என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். அத்தகைய உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாநில அரசுகளுக்கு, தேசிய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்,உத்தரவிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|