பதிவு செய்த நாள்
21 மே2016
05:12
புதுடில்லி;‘மத்திய அரசின் கொள்கை மாற்றங்கள், எதிர்பார்த்ததை விட, மந்தகதியில் நடைபெறுகின்றன’ என, சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு தெரிவித்துள்ளது. அதன் விவரம்:இந்தியாவில், ஆண்டுக்கு, 1.20 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும்; தயாரிப்பு துறை வளர்ச்சி கண்டால், இது சாத்தியமாகும். இரு ஆண்டுகளுக்கு முன், பிரதமர் மோடி தலைமையில் அமைந்த மத்திய அரசு, அதற்கான கொள்கைகளை வகுத்தது. அவற்றை செயல்படுத்துவதில், எதிர்பார்த்த அளவிற்கு வேகம் இல்லை. அதேசமயம், அக்கொள்கைகள் சரியான வழியில் தான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவது, உணவுப் பொருட்கள் விலையை ஸ்திரப்படுத்துவது, வங்கி நடவடிக்கைகளில் சீர்திருத்தம் மேற்கொள்வது போன்றவற்றில், அரசின் செயல்பாடு, மந்தமாக உள்ளது. இதை சமாளிக்க, உ.பி., சட்டசபை தேர்தலுக்கு முன், அனைத்து அரசியல் கட்சிகளிடையே மத்திய அரசு, கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.இப்பிரச்னைகளுக்கு துரிதகதியில் தீர்வு கண்டால், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டமுடியும். ரயில்வே துறையில் முதலீடுகளை அதிகரித்து, கிராமங்களுக்கும் நிதிச் சேவைகளை விரிவுபடுத்த வேண்டும்.
மானிய உதவிகளை முறைப்படுத்தி, மாநிலங்கள் இடையே, ஆரோக்கியமான போட்டியை வளர்க்கும் பட்சத்தில், சிறப்பான வளர்ச்சி காணலாம்.ஏற்றுமதி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு, உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்த முடியாத சூழல் போன்ற காரணங்களால், தனியார் முதலீடுகள் குறைந்துள்ளன. இதேபோல, நிதிப் பிரச்னையால், பொதுத் துறை நிறுவனங்களின் முதலீடுகளும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|