பதிவு செய்த நாள்
21 மே2016
05:15
பீஜிங்:உலகில், அதிக மக்கள் தொகை உள்ள சீனா, நுகர்வோர் சந்தையில் முதலிடத்தில் உள்ளதில் வியப்பேதும் இல்லை. எனினும், இந்தியாவின் நுகர்வோர் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது, சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை, சீனாவின் தேசிய பத்திரிகையான, ‘குளோபல் டைம்ஸ்’ கட்டுரை தெரிவிக்கிறது.
அதன் விவரம்:இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மக்களின் வருவாய்க்கேற்ப, தேவை அதிகரித்துள்ளது; அவர்கள், பல்வேறு பொருட்களை வாங்க, அதிகம் செலவிடுகின்றனர். அதற்கேற்ப, பலதரப்பட்ட பொருட்கள் சந்தையில் குவிகின்றன. இத்தகைய நுகர்வோர் சந்தை, வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
அதை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் கால் பதித்து வருகின்றன. புதிய முதலீட்டு மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. கடந்த, 2014ல், பிரதமர் மோடி தலைமையில் அமைந்த அரசு, உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது முதல், சீனாவின் தயாரிப்பு துறை, இந்தியாவிற்கு மாறி வருகிறது.
ஒரு கட்டத்தில், இந்திய நுகர்வோர் சந்தை, சீனாவையே விஞ்சக் கூடிய சாத்தியம் உள்ளது. அந்த அளவிற்கு, சீனாவுக்கு கடும் போட்டியாக இந்தியா உருவெடுத்து வருகிறது. சீனாவைப் போல், இந்தியாவும், மலிவு விலையில் பொருட்களை தயாரிக்கும். மக்களின் தேவை அதிகரித்து வருவது, நுகர்வோர் சந்தையின் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் தொழிலாளர்கள், தயாரிப்பு துறைக்கு அரசு அளிக்கும் சலுகைகள் போன்றவை, இந்திய தயாரிப்பு துறையை ஊக்குவித்து வருகின்றன. இதன் காரணமாக, சீனாவின், ‘ஜியோமி’ உள்ளிட்ட பல நிறுவனங்கள், இந்தியாவில், ‘ஸ்மார்ட்போன்’ தயாரிப்பில் இறங்கியுள்ளன.
இந்தியாவின் எழுச்சி, சீனாவின் தயாரிப்பு துறைக்கு சவாலாக உள்ளது.‘21ம் நுாற்றாண்டின் புதிய, பெரிய சந்தையாக இந்தியா உருவாகும்’ என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் வர்த்தக சூழல் மேலும் மேம்படும்பட்சத்தில், சர்வதேச நாடுகளின் தேவைக்கும், அளிப்பிற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கக் கூடிய நாடாக, அது உருவெடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|