பதிவு செய்த நாள்
23 மே2016
08:00
நிதி வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது எளிதானது என்று கூறி நிதி வாழ்க்கைக்கான அடிப்படை அம்சங்களை விவரிக்கிறது பெத் கோப்லைனர் எழுதியுள்ள, ‘கெட் ஏ பைனான்சியல் லைப்’ புத்தகம்.
இலக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதில் இருந்து துவங்கி அவற்றை அடைவதற்கான வழிகளையும் முன்வைக்கிறார்: இலக்கின் விலை: அடுத்த சில ஆண்டுகளை அடையக்கூடிய குறிப்பிட்ட நிதி கனவுகள் உங்களுக்கு இருக்கும். கார் வாங்குவதாகவோ அல்லது கடனில் இருந்து விடுபடுவதாகவோ அது இருக்கலாம். உங்கள் நிதி விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான முதல் படி அவற்றுக்கான விலையை பணத்தின் அளவில் அறிந்து கொள்வதாகும்.
உதாரணத்திற்கு, கார் வாங்குவது என்றால் அதற்கு தேவையான தொகை என்ன என கணக்கிட வேண்டும். கடனில் இருந்து விடுபடுவது என்றால், மாதந்தோறும் அடைக்க வேண்டிய தொகை தெரிய வேண்டும். இலக்கிற்கான விலையை தெரிந்து கொண்டதும், அதை அடைவதற்கான பயணத்தை துவங்க வேண்டும். அதாவது, மாதந்தோறும் அதற்கான தொகையை ஒதுக்க வேண்டும். இதை சாத்தியமாக்குவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். இதற்கு முதலில் மாத வருமானம் மற்றும் மாத செலவுகளை தெளிவாக குறித்து வைக்க வேண்டும்.
நிதி விதிகள்: உங்கள் செலவு பழக்கம் மற்றும் சேமிப்பு சரியான திசையில் இருக்கிறதா என அறிந்து கொள்வது அவசியம். இதற்கு சில அடிப்படையான விதிகள் இருக்கின்றன. முதலில் மாத கடன் தவணையான வருமானத்தில் 20 சதவீதத்திற்கு மேல் இருக்க கூடாது. (வீட்டுக்கடன் நீங்கலாக). இதற்கு மேல் இருந்தால் கடன் தவணையை குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதேபோல, வீட்டுக்கடனுக்கான தவணையாக, மாத வருமானத்தில், 30 சதவீதத்திற்கு மேல் செலவிடாமல் இருப்பது நல்லது. இவைத்தவிர, மாதந்தோறும் கண்டிப்பாக வருமானத்தில் குறைந்தபட்சம் 10 சதவீதம் சேமிக்க வேண்டும். இந்த தொகையை நிலையான மாத செலவாக கருத வேண்டும். உங்கள் சேமிப்பு பழக்கங்களை அதிகமாகக்கூடிய வழிகளை கண்டறிந்து செயல்படுத்துங்கள்; செலவுகளில் சிக்கனத்தை கடைபிடியுங்கள்.
பணத்தின் பாதை: முக்கியமாக உங்களுக்கு பணம் எப்படி வருகிறது, எங்கெல்லாம் செலவாகிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். தானியங்கி கணக்கு முறையை பயன்படுத்தலாம். இது தானாக சேமிக்கப்படவும் உதவும். செலவு பழக்கத்தையும் கட்டுப்படுத்தும்.
முதலீடு: கடனில் இருந்து விடுபட்டு, சேமிப்பும் சீராகும் போது, உபரி வருமானத்தை முறையாக முதலீடு செய்ய வேண்டும். அதற்கு முன் எதிர்பாராத நெருக்கடிகளை சமாளிப்பதற்கான அவசர நிதியை உருவாக்கி கொள்ள வேண்டும். அதன் பின் பொருத்தமான நிதி சாதனங்களில் முதலீடு செய்யத்துவங்க வேண்டும். போதுமான காப்பீடு பெற்றிருப்பதோடு, வரி செலுத்துவதற்கான திட்டமிடுதலையும் ஆரம்பத்திலேயே சரியாக மேற்கொள்ள வேண்டும்!
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|