பதிவு செய்த நாள்
27 மே2016
15:01
மூணாறு,: மறையூரில் சந்தன கட்டை ஏலம், ஜூன் 23,24 ஆகிய தேதிகளில் 'இ- சேவை' முறையில் நடத்த வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே மறையூரில் 55 ஆயிரத்துக்கும் அதிகமான சந்தன மரங்கள் உள்ளன. இயற்கை சீற்றங்கள் மூலம் ஒடிந்து விழும் சந்தனமரங்களும், கடத்தலின்போது பறிமுதல் செய்யப்படும் சந்தன கட்டைகளும், மறையூரில் சந்தன டிப்போவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.'இ- சேவை' ஏலம்முடிந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட சந்தன கட்டைகள் உள்ளிட்டவைகள் ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படும். இதில் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமானோர் பங்கேற்று, தேவைக்கு ஏற்ப சந்தன கட்டைகளை வாங்கிச் செல்வர். சமீப காலம் வரை மறையூரில் வெளிப்படையாக ஏலம் நடத்தப்பட்டு வந்தது. இதனால் பலரால் ஏலத்தில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டதால், இதை நிவர்த்தி செய்து, அனைவரும் ஏலத்தில் பங்கேற்க வசதியாக, 'இ- சேவை' முறையில் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இம் முறையில் கடந்தாண்டு அக்டோபர் 14,15 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெற்றது. அப்போது 48.02 டன் சந்தன கட்டைகள் ஏலம் விடப்பட்டதில் அரசுக்கு வரி உள்பட ரூ.38.54 கோடி வருமானம் கிடைத்தது.முடிவுஇந்தாண்டு ஜூன் 23,24 ஆகிய தேதிகளில், 'இ-சேவை' முறையில் ஏலம் நடத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இந்த முறை 66.42 டன் சந்தன கட்டைகள் ஏலம் விடப்படுகின்றது. இவை தரத்திற்கு ஏற்ப 13 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை அதிக பட்சமாக ஒரு கிலோ சந்தன கட்டைக்கு வரி உள்பட ரூ.20 ஆயிரம் வரை விலை கிடைத்தது. ஆனால் இந்த முறை முதல் இரண்டு வகை சந்தன கட்டைகள் ஏலத்தில் இடம் பெறவில்லை என்பதால், விலையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|