பதிவு செய்த நாள்
28 மே2016
05:14
புதுடில்லி : கார் தயாரிப்பு நிறுவனங்களை விட, இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், நல்ல லாபத்துடன் செயல்பட்டு வருகின்றன.
மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ஹுண்டாய் மோட்டார்ஸ், ஹோண்டா கார்ஸ், டொயோட்டா கிர்லோஸ்கர், போர்டு இந்தியா ஆகிய ஆறு கார் தயாரிப்பு நிறுவனங்களின் கடன், 2014 – 15ம் நிதியாண்டில், 60 சதவீதம் உயர்ந்து, 40 ஆயிரத்து, 300 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், இருசக்கர வாகனங்களை தயாரிக்கும், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ்., மோட்டார்ஸ், எய்ச்சர் மோட்டார்ஸ், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர்ஸ் இந்தியா ஆகிய, ஐந்து நிறுவனங்களின் கடன், 50 சதவீதம் குறைந்து, 1,082 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
ஆறு கார் தயாரிப்பு நிறுவனங்கள், 1.95 லட்சம் கோடி ரூபாய் வருவாயில், 3,440 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியிருந்தன. இதே காலத்தில், இருசக்கர வாகன நிறுவனங்கள், 81 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் வருவாயில், 6,900 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், கார் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய கார்களை உருவாக்குவது, உற்பத்தி திறனை அதிகரிப்பது, விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றுக்காக, 71 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளன.இதே காலத்தில், இத்தகைய செயல்பாடுகளுக்கு, இருசக்கர வாகன நிறுவனங்கள், வெறும், 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் செலவழித்துள்ளன.
கார் விற்பனையை தீர்மானிப்பதில், தொழில் துறை, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலை, இருசக்கர வாகனங்கள் துறைக்கு இல்லை; அது, நுகர்வோரின் தேவை மற்றும் விருப்பத்தை சார்ந்துள்ளது.எனினும், வரும் ஆண்டுகளில், தனி நபர் வருவாய் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், இருசக்கர வாகனங்களை விட, கார் நிறுவனங்களின் விற்பனையும், லாபமும் அதிகரிக்கும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|