பதிவு செய்த நாள்
28 மே2016
05:15
மும்பை : ‘சுயஉதவி குழுக்களின் வாராக்கடன்களை உடனடியாக கண்காணிக்க வேண்டும்’ என, அனைத்து நகர்ப்புற, மத்திய, மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கிராமப்புறங்களில், சுயவேலைவாய்ப்புகளை உருவாக்கி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு, சுய உதவிக்குழுக்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. பெண் உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இக்குழுக்களுக்கு, வங்கிகள், நுண்கடன் நிறுவனங்கள் ஆகியவை, கடன் வழங்குகின்றன. இந்நிலையில், 2014ல், ரிசர்வ் வங்கி, கடன் பெற்றுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களின் விவரங்களை வழங்குமாறு, கூட்டுறவு வங்கிகளிடம் கேட்டது. கடன் பெறும் சுய உதவிக்குழு தலைமையின் கீழ், 10 – 20 உறுப்பினர்கள் உள்ளதால், விவரங்களை சேகரிப்பதில் உள்ள சிரமங்களை, வங்கிகள் எடுத்துரைத்தன.
இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி அமைத்த குழு ‘சுய உதவிக்குழுக்களின் கடன் தகுதியை நிர்ணயிக்கவும், கடன் வழங்குவது குறித்து, வங்கிகள் முடிவு எடுக்கவும், உறுப்பினர்களின் விவரங்கள் மிகவும் இன்றியமையாதது’ என, சமீபத்தில் தெரிவித்தது.இதையடுத்து, ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பிஉள்ள அறிக்கையில், ‘சுய உதவிக்குழு உறுப்பினர் குறித்த தகவல்கள், கடன் விவரங்கள் ஆகியவற்றை சேகரிக்கும் பணி, இரு கட்டங்களாக நடைபெறும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கூட்டுறவு வங்கிகளில், 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கடன் பெற்ற சுய உதவிக்குழு உறுப்பினர்களின் விவரங்களை திரட்டும் பணி, வரும் ஜூலை 1ல் துவங்கி, ஓராண்டில் முடிவடையும். அடுத்த ஆண்டு, ஜூலை 1 முதல், சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கடன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் பணி துவங்கும்.
இத்துடன், ‘சுய உதவிக்குழுக்களின் வாராக்கடன்களை உடனடியாக கண்காணிக்க வேண்டும்; வாராக்கடன், 10 சதவீதத்தை தாண்டியிருந்தால், 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக கடன் பெற்ற உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும்’ என, கூட்டுறவு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.சுய உதவிக் குழுக்கள், கடன் வழங்கும் உறுப்பினர்களின் விவரங்களை ஏட்டிலோ அல்லது ‘டிஜிட்டல்’ முறையிலோ பராமரிக்க, வங்கிகள் ஊக்குவிக்க வேண்டும். அத்தகைய குழுக்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கலாம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சுய உதவிக்குழுக்களின் வாராக் கடன்களை உடனடியாக கண்காணிக்க வேண்டும்; வாராக்கடன், 10 சதவீதத்தை தாண்டியிருந்தால், 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக கடன் பெற்ற உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|