பதிவு செய்த நாள்
04 ஜூன்2016
07:42
புதுடில்லி : மத்திய அரசு, ‘தேசிய பெர்மிட் டாக்சி கொள்கை’யை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. டில்லியில், வாகனப் புகையால் உண்டாகும், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், டீசல் டாக்சிகளை, சி.என்.ஜி., காஸ் வாகனங்களாக மாற்ற, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட், இரு முறை அவகாசம் அளித்த பின்னும், பெரும்பான்மையான டாக்சிகள், காஸ் பயன்பாட்டிற்கு மாறாமல் இருந்தன. இதைத் தொடர்ந்து, கடந்த மே 1 முதல், டில்லியில் டீசல் டாக்சிகளுக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. அதேசமயம், இந்திய சுற்றுலா பெர்மிட் உள்ள டீசல் டாக்சிகளுக்கு, விதிவிலக்கு அளித்து, அவை, தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு வெளியே இயங்க அனுமதித்தது. பாதிக்கப்பட்ட டாக்சி உரிமையாளர்கள், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, ‘டாக்சிகளுக்கு தனி கொள்கையை உருவாக்கும் பணியில், அமைச்சரவை ஈடுபட்டுள்ளது’ என, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு, 40 கி.மீ., பயணம் மேற்கொள்ளும் டாக்சி; ஒரு மணி நேரம் அல்லது ஒரு நாள் வாடகைக்கு பயணிக்கும் டாக்சி ஆகியவற்றை, தேசிய பெர்மிட் டாக்சிகளாக வரையறுப்பது குறித்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. எனினும், நிதின் கட்கரி மற்றும் அவரது அமைச்சரவை செயலர் சஞ்சய் மிஸ்ரா தலைமையிலான மூவர் குழுவின் ஒப்புதலுக்குப் பின், புதிய டாக்சி கொள்கை குறித்த அறிவிப்பு வெளியாகும் என, அந்த அதிகாரி மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|