பதிவு செய்த நாள்
04 ஜூன்2016
07:43
புதுடில்லி : ‘இந்தியாவில், இளைய சமுதாயத்தினர் வேகமாக பெருகி வருவதற்கேற்ப, வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்க வேண்டும்’ என, ‘கோல்டு மேன் சாக்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் விவரம்: இந்தியா, வலிமையான இளைஞர் பட்டாளத்தைக் கொண்ட நாடாக விளங்குகிறது. இளையோர் எண்ணிக்கை வேகமாக பெருகி வருவதற்கேற்ப, மேம்பட்ட கல்வி பயின்று வருவோரின் எண்ணிக்கையும், அதிகரித்து வருகிறது. அதனால், அத்தகையோருக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மிகப் பெரிய பொறுப்பும், கடமையும், ஆட்சியாளர்களுக்கு உள்ளது. சிறப்பான கல்வி அறிவுடன், நல்ல ஊதியத்தில் பணியாற்றும் இளைய சமுதாயத்தினரிடம், வாங்கும் சக்தி அதிகரித்து வருகிறது.அதன் விளைவாக, அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியா, மிகப் பெரிய நுகர்வோர் சந்தையாக உருவெடுக்கும். கடந்த, 2015ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் தனிநபர் வருவாய், 1,650 டாலராக உள்ளது. இது, 2005ல், சீனாவின் தனிநபர் வருவாய்க்கு நிகரானதாகும்.
இந்நிலையில், பெருகிவரும் இளைஞர்களுக்கு ஏற்ப, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், வரும் ஆண்டுகளில், இந்தியாவின் தனிநபர் வருவாய், குறிப்பிடத்தக்க வகையில் உயரும். மக்கள் தொகையில், நகர்ப்புற மத்திய வகுப்பைச் சேர்ந்த, 2.70 கோடி பேரின், ஆண்டு வருவாய், 11,000 டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவில், 2000ம் ஆண்டு வாக்கில், வாலிப வயதை எட்டிய, 44 கோடி பேரும், அதன் பின் பிறந்த, 39 கோடி பேரும், தான், இந்திய நுகர்வோர் சந்தையின் போக்கை தீர்மானிப்பதாக, மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகையோரின் எண்ணிக்கை உயர்விற்கேற்ப, நுகர்பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும். அதற்கேற்ப, இத்துறை நிறுவனங்கள், முதலீட்டு திட்டங்களை வகுக்க வேண்டும்.
இந்தியாவில், அரசு துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. ஐ.டி., துறையிலும், அதிக ஊதியம் தரும் போக்கு மறைந்து வருகிறது. இத்தகைய சூழலில், சேவைத் துறையில், குறிப்பாக, உணவு, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பிரிவுகளில், வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவது ஆறுதல் அளிக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்திய நகர்ப்புறங்களில், படித்த இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக உயரும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பான கல்வி அறிவுடன், நல்ல ஊதியத்தில் பணியாற்றும் இளைய சமுதாயத்தினரிடம், வாங்கும் சக்தி அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக, அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியா, மிகப் பெரிய நுகர்வோர் சந்தையாக உருவெடுக்கும்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|