பதிவு செய்த நாள்
05 ஜூன்2016
02:11
சென்னை;‘பாதுகாப்பு துறையில், ராணுவ தளவாடங்கள் உட்பட, பல்வேறு சாதனங்கள், கருவிகள் தயாரிப்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பிரகாசமான வர்த்தக வாய்ப்பு உள்ளது’ என, இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.சென்னையில், இந்திய தொழிலக கூட்டமைப்பின் சார்பில், ‘பாதுகாப்பு துறையில் தயாரிப்பு தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டு வர்த்தக வாய்ப்பு’ குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில், பாதுகாப்பு துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்து கொண்டு பேசினர்.
சஞ்சய் கர்க், இணை செயலர், பாதுகாப்பு அமைச்சகத்தின் தயாரிப்பு பிரிவு: கடந்த இரண்டு ஆண்டுகளில், பாதுகாப்பு துறையில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இத்துடன், அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு துறையில், அன்னிய நேரடி முதலீடு, 49 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராணுவ தளவாட தொழிற்சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. ராணுவ சாதனங்கள் இறக்குமதி தொடர்பான விதிமுறைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இது, உள்நாட்டில் உள்ள, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பான வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துஉள்ளது.
ராணுவ உதிரிபாகங்கள்ஏற்றுமதி, குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. ஜெயகர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர், நிர்வாக இயக்குனர், யுகால் பியூயல் சிஸ்டம்ஸ்: பாதுகாப்பு துறை, இந்திய தொழில் துறைக்கு மிகச் சிறந்த வர்த்தக வாய்ப்பை வழங்கியுள்ளது. இத்துறையில், 5,000 கோடி டாலர் அளவிற்கு செலவிடப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில், பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 12 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்திய நிறுவனங்களின் முக்கிய பங்குதாரராக, அன்னிய நிறுவனங்கள் இருந்த சூழல் இப்போது இல்லை. உள்நாட்டு நிறுவனங்கள், தனிப்பட்ட முறையில் ராணுவ சாதனங்களை தயாரிக்கும் நிலை உருவாகியுள்ளது. சர்வதேச பாதுகாப்பு தளவாடங்கள் சந்தையில், ஜப்பான் முக்கிய பங்கு வகிக்கிறது.
எஸ்.ரங்கராஜன், தலைமை செயல் அதிகாரி, டாடா பேட்டர்ன்ஸ்: ராணுவ தளவாடங்களுக்கான, ‘ஆர்டர்’ குறைவாகவும், ஒழுங்கற்றும் இருக்கலாம். ஆனால், தளவாடங்களின் தரத்தில், எவ்வித சமரசத்திற்கும், இடம் கொடுக்ககூடாது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அவற்றின் செயல்பாடுகளில் ஒழுக்கத்தையும், பொருட்களின் தரத்தை பராமரிப்பதில் மிகுந்த கவனத்தையும் செலுத்தினால், மிகச் சிறப்பான வருவாய் ஈட்டலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|