பதிவு செய்த நாள்
06 ஜூன்2016
07:00
கோல்கட்டா : இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சி பெற்று வரும் நுண்கடன் துறையில், உலக வங்கியின் ஓர் அங்கமான, ஐ.எப்.சி., நிறுவனம், 435 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.‘வரும் ஜூலை 4ம் தேதி நடைபெறும், இயக்குனர் குழு கூட்டத்தில், முதலீடுகள் குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்’ என, ஐ.எப்.சி., உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: இந்திய நிதி சேவைகள் துறையில், நுண்கடன் பிரிவு ஒன்றுதான், பிரமிக்கத்தக்க வகையில் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில், இத்துறையின் வருவாய், 84 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதுபோல, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும், 44 சதவீதம் உயர்ந்துள்ளது.இத்தகைய வளர்ச்சி காரணமாக, நுண்கடன் துறையில் ஐ.எப்.சி., அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புகிறது. இதன்படி, நுண்கடன்களை வழங்கி வரும், சிட்டி குழுமத்தின், ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தில், 330 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில், ஐ.எப்.சி., ஏற்கனவே, 2014ல், 120 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. தற்போது, இரண்டாம் கட்டமாக முதலீடு செய்யப்பட உள்ளது. அடுத்து, கிராமீன் கூட்டா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தில், ஐ.எப்.சி., 135 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.குடிசை தொழில்கள், கைவினைஞர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு, நுண்கடன் நிறுவனங்கள், கடன் வழங்குகின்றன. வங்கிகளை அணுக விரும்பாதோர், எளிமையான நடைமுறையில் சுலபமாக கடன் பெற உதவும், நுண்கடன் நிறுவனங்களை நாடுகின்றனர். இந்தியாவில், நகர்புறங்களில் அதிக அளவில் நுண்கடன்களை வழங்கும் மிகப்பெரிய நிறுவனமாக, கர்நாடகாவைச் சேர்ந்த, ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஸ் உள்ளது. இந்நிறுவனம், 18 நகரங்களில், 330 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த, மார்ச் நிலவரப்படி, இந்நிறுவனம், 46 லட்சம் வாடிக்கையாளர்களுடன், 9,100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, கடன் வழங்கியுள்ளது.கிராமீன் கூட்டா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமையகம், கர்நாடக மாநிலம், பெங்களுரில் உள்ளது. இந்நிறுவனம், ஐந்து மாநிலங்களில், 298 கிளைகள் மூலம், நுண்கடன்களை வழங்கி வருகிறது. கடந்த மார்ச் நிலவரப்படி, இந்நிறுவனம் வழங்கிய நுண்கடன், 180 கோடி ரூபாய்; வாடிக்கையாளர் எண்ணிக்கை, 12 லட்சம் என்ற அளவில் உள்ளது. இந்நிறுவனத்தில், நெதர்லாந்தைச் சேர்ந்த, கிரெடிட் அசெஸ் ஏஷியா நிறுவனம், 81 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|