பதிவு செய்த நாள்
11 ஜூன்2016
07:38
மும்பை : ‘‘உங்கள் வேலைக்கு, ‘வேட்டு’ வைக்கப் போகும், ‘ரோபோ’ தான், தற்போதைய மிகப் பெரிய அச்சுறுத்தல்,’’ என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
மும்பையில், ‘வேர்ல்டு 2050’ என்ற நுால் வெளியீட்டு விழாவில், அவர் பேசியதாவது:உங்கள் வேலையை பறிக்கப் போவது, ஏதோ பெங்களூரில் உள்ள, ஐ.டி., ஊழியர் அல்ல. உங்கள் அருகிலேயே இருக்கும், இயந்திர மனிதனான ரோபோ தான், உங்கள் வேலையை பறிக்கப் போகும் அச்சுறுத்தலான நபர். அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் பிரசாரத்திலும், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது தொடர்பான பிரிட்டன் அரசியல் பிரசாரத்திலும், இந்த பிரச்னை தான் முன்னிலை வகிக்கிறது.
உயர் தொழில்நுட்ப துறை வல்லுனர்கள் அல்லது அடிமட்டத்தில் உள்ள பாதுகாவலர்கள் ஆகியோர் தான், ரோபோவால் தங்கள் வேலை பறிபோகாது என, பணி பாதுகாப்புடன் இருக்கின்றனர். நடுத்தர வர்க்கம் செய்வதறியாது திகைக்கிறது; அவர்களின் வேலைகள் மாயமாகின்றன. அதற்கு தொழில்நுட்பம் அல்லது உலகமயமாக்கல் என்ற இரண்டு அம்சங்கள் தான் காரணம்.
இப்பிரச்னைக்கு ஏதாவது ஒரு வகையில் தீர்வு காண வேண்டும். எப்படி என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளுக்கு அதற்கான விடை தெரியும். இதன் விளைவாகவே, குடியேற்றத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது; தொழில்நுட்பமும் ஒதுக்கப்படுகிறது. இந்தியா, வியட்னாம் போன்ற ஏற்றுமதியை சார்ந்துள்ள நாடுகளுக்கும், தொழில்நுட்ப மாற்றங்கள் கவலை அளிக்கின்றன; சரக்குகளுக்கும், சேவைகளுக்கும் தேவை இல்லாமல் போனால் என்ன செய்வது என, யோசிக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|