பதிவு செய்த நாள்
13 ஜூன்2016
07:32
கடன் பெறும் போது கவனமாக இருப்பது போலவே கடன் கொடுக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். பல நேரங்களில் உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ கடன் கொடுக்கும் சூழ்நிலை உருவாகலாம். அவசரமாக பணம் தேவை என்று வந்து நிற்கும் போது உதவி செய்வது தான் இயல்பு. இப்படி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடன் கொடுத்து உதவிய அனுபவம் பலருக்கும் உண்டு. பெரும்பாலும் கடன் பெற்றவர்கள், அதை உரிய நேரத்தில் கொடுத்து நன்றி தெரிவிக்கலாம் என்றாலும் ஒரு சிலர், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இழுத்தடிக்கும் சூழலும் வரலாம். சில நேரங்களில், அத்தகைய சோதனையிலும் அவர்கள் சிக்கிக் கொள்ளலாம்; எப்படி இருந்தாலும் சிக்கல் தான். அதற்காக, கடன் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றில்லை; கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும்.
நெருக்கமானவர்களுக்கு கடன் கொடுக்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:* உங்களால் முடிந்தால் மட்டுமே கடன் கொடுங்கள். மாறாக கேட்பவர் தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று நினைத்து கடன் கொடுக்க வேண்டாம். பொருளாதார சூழல் இடம் தரவில்லை எனில், ‘எனக்கு உதவி செய்ய விருப்பம் தான், ஆனால் என்னிடம் இப்போது கூடுதலாக பணம் இல்லை’ என, எடுத்துச் சொல்லுங்கள். முடிந்தால் கடன் பெறுவதற்கான மாற்று வழிகளை பரிந்துரைக்கலாம். மனமில்லாமல் தவிர்க்கவும் வேண்டாம்; கடன் கொடுப்பதற்காக நீங்கள் சிக்கலுக்குளாகவும் வேண்டாம்* கடன் கேட்பவர் நம்பிக்கைக்குரியவராக, மிகவும் நெருங்கியவராக இருந்தாலும் கூட உங்களால் கொடுக்க முயன்ற தொகையை மட்டுமே கொடுக்கவும். ஏனெனில், எதிர்பாராத காரணத்தால் அவரை மீறி பணத்தை உரிய காலத்தில் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டாலும், நீங்கள் பணத்தை கேட்டு வற்புறுத்தும் நிலை இருக்காது. எனவே, திரும்பி செலுத்தப்படாவிட்டாலும் பரவாயில்லை என கருதும் தொகையை கொடுக்கவும்* தெரிந்தவர்களிடம் கடன் பெறும் போது திரும்பி செலுத்துவதற்கான நிர்பந்தம் இல்லாமல் போகலாம். மேலும் கடன் பெற்றவர், தாமதமாக கொடுத்துக் கொள்ளலாம் என்றும் நினைக்கலாம். இதனால், மனக் கசப்புகள் ஏற்படலாம். எனவே, பணம் கொடுக்கும் போதே அதை எப்போது, எப்படி திரும்பிச் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். தேவையெனில், வட்டியும் செலுத்துமாறு கூறலாம்* இது கொஞ்சம் சிக்கலானது தான். ஆனால் அவசியமானது. கொடுத்த கடனுக்காக எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் நிபந்தனைகளையும் குறிப்பிட வேண்டும். தேவையெனில் இதற்கு சட்ட அங்கீகாரமும் பெறலாம். இரு தரப்பினருக்குமே இது உதவியாக இருக்கும்* கடன் கொடுத்த பின் உரிய நேரத்தில் அதை திரும்ப கேட்க அல்லது தவணையை நினைவுப்படுத்த மறக்க வேண்டாம். தெரிந்தவர் தானே எனும் அலட்சியம் ஏற்பட்டு பணம் தருவதை தாமதமாக்குவதை இது தவிர்க்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|