பதிவு செய்த நாள்
13 ஜூன்2016
07:34
வரும் மாதங்களில் வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருப்பதாக கருதப்படும் நிலையில், கடன்கள் மற்றும் டிபாசிட்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய அணுகுமுறை என்ன?
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையில் வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் தொடர்பாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே உள்ள நிலையே தொடரும் என, ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. இதனால், கடனுக்கான வட்டி விகிதம் உடனடியாக குறைய வாய்ப்பு இல்லை. இது வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் டிபாசிட்களில் ஆர்வம் உள்ளவர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது. ஏனெனில், வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருந்தால் அதற்கேற்ப வங்கி டிபாசிட்கள் மீதான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டிருக்கலாம். எனினும், வட்டி குறைப்புக்கு சாதகமான சூழல் நிலவினால் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்பதே ரிசர்வ் வங்கியின் பொதுவான கொள்கையாக இருக்கிறது.
வட்டி விகித போக்குகடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் ரிசர்வ் வங்கி, 150 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துஉள்ளது. குறைந்த வட்டி விகிதம், பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்த நிதிக் கொள்கையில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்றாலும் வரும் காலத்தில் இதற்கான வாய்ப்பு இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளது. பணவீக்கம், உற்பத்தி துறை வளர்ச்சி மற்றும் பருவமழை முன்னேற்றம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் இது அமையலாம். குறைந்த வட்டி விகிதப்போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், வங்கிக் கடன் மற்றும் டிபாசிட்கள் உள்ளிட்ட முதலீடுகள் மீதான தாக்கம் எப்படி இருக்கும் என்ற கேள்வியும், முதலீட்டாளர்கள் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றன. வட்டி விகிதம் குறையும் போது கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவது போல, வங்கி டிபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதற்கேற்ப குறைக்கப்பட்டு பாதிப்பு உண்டாக்கலாம்.
டிபாசிட் உள்ளிட்ட நிலையான வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்புகளை நாடும் மூத்த குடிமகன்கள் மற்றும் பாதுகாப்பை நாடும் முதலீட்டாளர்களுக்கு இது பாதகமாக அமையும். எனினும், தற்போது வட்டி விகிதம் மாறாமல் தொடரும் நிலையில் டிபாசிட் விகிதத்திலும் மாற்றம் இல்லை. எனவே, தற்போதைய சூழல் டிபாசிட் செய்ய விரும்புகிறவர்களுக்கான வாய்ப்பாக அமைவதாக, நிதி வல்லுனர்கள் கருதுகின்றனர். டிபாசிட் செய்யும் திட்டத்தில் இருப்பவர்கள் இப்போதுள்ள வட்டி விகிதத்தில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்த சூழலில், வங்கி டிபாசிட்களை விட வர்த்தக டிபாசிட்கள் ஏற்புடையதாக இருக்கும் என, ஒரு கருத்து இருக்கிறது.
வங்கி டிபாசிட்களை விட இவற்றின் வட்டி விகிதம் கூடுதலாக இருக்கும் என்றாலும் கூட, இவற்றுடனான ரிஸ்க் அம்சமும் அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே, அரசு சார்ந்த நிறுவனங்கள், மதிப்பு மிக்க வர்த்தக நிறுவனங்கள் அல்லது நல்ல கிரடிட் ரேட்டிங் உள்ள நிறுவனங்களின் டிபாசிட் திட்டங்களை மட்டுமே பரிசீலிக்க வேண்டும் என, நிதி ஆலோசகர்கள் கருதுகின்றனர்.
கடன் விகித மாற்றம்வீட்டுக்கடன் மற்றும் வாகனக்கடன் விகிதங்களில் உடனடியாக எந்த மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இதுவரை அறிவிக்கப்பட்ட வட்டி குறைப்பே முழுவதும் வாடிக்கையாளர்களை சென்றடைய வழி செய்யவில்லை என்ற கருத்தே பரவலாக இருக்கிறது. இதன் காரணமாகவே வட்டி விகிதத்தை கணக்கிட, வங்கிகள் பழைய பேஸ் ரேட் முறைக்கு பதிலாக எம்.சி.எல்.ஆர்., முறையை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் தற்போது, இந்த முறையை தான் கடைபிடிக்கின்றன. இந்த சூழலில் கடன் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், மாறாத வட்டி விகிதக் கடனை தவிர்த்து, மாறும் வட்டி விகிதக் கடனை நாடலாம் என, நிதி ஆலோசகர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே கடன் பெற்றிருப்பவர்கள், புதிய முறைக்கு மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதற்கு கட்டணம் உண்டு. வங்கிகள் இன்னமும் பெரிய அளவில் வட்டி குறைப்பின் பலனை அளிக்காத நிலையில், உடனடியாக இந்த மாற்றத்தை மேற்கொள்வதை விட வட்டி விகித போக்கை பார்த்து, அதனடிப்படையில் செயல்பட வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|