பதிவு செய்த நாள்
18 ஜூன்2016
07:39
புதுடில்லி : ‘இந்தியாவில் பெருகி வரும் நகர்ப்புறங்களின் தேவையை சமாளிக்க, உணவுப் பொருட்கள் துறையில் உடனடியாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘சிகாகோ கவுன்சில் ஆன் குளோபல் அபேர்ஸ்’ என்ற அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:இந்தியாவில், நகர்ப்புறங்கள் மிக வேகமாக விரிவடைந்து வருகின்றன. வேலைவாய்ப்பும் மக்களின் வருவாயும் பெருகி வருகிறது. அதற்கேற்ப, நகர்ப்புறங்களில், உணவுப் பொருட்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. அடுத்த, 40 ஆண்டுகளில், நகர்ப்புறங்களில், மக்கள் தொகை, இரு மடங்கு உயரும் சூழலில், உணவுப் பொருட்களின் தேவையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை இப்போதே துவக்க வேண்டும். இந்திய உணவுப் பொருட்கள் துறையின் பெரும்பகுதி, அமைப்பு சாராமல், பிளவுபட்டு காணப்படுகிறது. உணவுப் பொருட்கள் கொள்முதல், வினியோகம், சில்லரை விற்பனை ஆகியவற்றில், ஒருங்கிணைப்பு இல்லாத நிலை உள்ளது.
இவற்றை சமாளிக்க, அரசு, உணவுப் பொருட்கள் கொள்முதல் நடைமுறைகளில், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், உணவுப் பொருட்களுக்கான தீர்வை, நகர்ப்புற உணவு வினியோகத்தை பாதிக்கும் வரிக் கொள்கைகள் ஆகியவற்றில், மாற்றம் செய்ய வேண்டும். சிக்கலான கட்டுப்பாட்டு விதிமுறைகளை தளர்த்தி, உணவுப் பொருட்களுக்கான ஆய்வக வசதிகளை மேம்படுத்த வேண்டும்.உணவுப் பொருட்களின் சீரான வினியோகத்திற்கு, அவற்றுக்கான கிடங்குகள், குளிர்பதன கூடங்கள், பதப்படுத்தும் மையங்கள் ஆகியவற்றை அதிக அளவில் அமைக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால், பெருகி வரும் நகர்ப்புற மக்களின் உணவுப் பொருட்களுக்கான தேவையை சமாளிக்கலாம்.
இந்தியாவில், 36 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள, உணவுப் பொருட்கள் சந்தையில், அதிக அளவில், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க வேண்டும். நகர்ப்புற மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு மட்டுமின்றி, போதிய ஊட்டச்சத்துடன் உணவுப் பொருட்கள் கிடைக்கவும், அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
இந்திய உணவுப் பொருட்கள் துறையில், குறிப்பிட்ட பிரிவுகளை இலக்காக கொண்டு, அவற்றில், அரசு முதலீடு செய்ய வேண்டும். அத்துடன், பெருகும் நகர்ப்புற மக்களுக்கான உணவுப் பொருட்களின் தேவையை சமாளிக்கவும், அவர்களுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள் கிடைக்கவும், தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டும்.-சிகாகோ கவுன்சில் ஆப் குளோபல் அபேர்ஸ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|