பதிவு செய்த நாள்
21 ஜூன்2016
00:02
புதுடில்லி : ‘‘மத்திய அரசின் திட்டங்களால், இந்தியாவில் தனிநபர் உருக்கு பயன்பாடு, அடுத்த, 10 ஆண்டுகளில், சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு நிகராக உயரும்,’’ என, பொது துறையைச் சேர்ந்த, ‘செயில்’ நிறுவனத்தின் தலைவர் பி.கே.சிங் தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: உலகளவில், உருக்கு உற்பத்தியில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், உருக்கு பொருட்கள் பயன்பாட்டில், மிகவும் பின்தங்கியுள்ளது. உலக நாடுகளில், ஒரு நபரின் உருக்கு பயன்பாடு, சராசரியாக, 216.6 கிலோ என்ற அளவில் உள்ளது. இது, இந்தியாவில், 2014 நிலவரப்படி, 59.4 கிலோவாக உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அடிப்படை கட்டமைப்பு, மின்சாரம், ரயில்வே உள்ளிட்ட துறைகளில், ஏராளமான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், உருக்கு பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு துறையில், வரும் ஆண்டுகளில், 1 லட்சம் கோடி டாலர் முதலீடு குவியும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தொழில் துறை, 11 – 12 சதவீத வளர்ச்சி காணும். நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரிக்கும்.
மத்திய அரசின், ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ், வரும், 2022க்குள், கிராமப்புறங்களில் 2.95 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன. இத்துடன், சாலை வசதியற்ற அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகளை ஏற்படுத்தும், ‘பிரதான் மந்திரி கிராம் சதக்’ திட்டமும், உருக்கு பொருட்களுக்கான தேவையை பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும். ரயில்வே துறையில் குவியும் தனியார் முதலீடு, புதிய மற்றும் விரிவாக்கத் திட்டங்களால், உருக்கு பயன்பாடு மேலும் பெருகும். இதன் மூலம், அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியாவில், தனிநபர் உருக்கு பயன்பாடு, உலக நாடுகளுக்கு நிகராக உயரும்.
உலகளவில், தற்போதைய சூழலில், இந்தியா தான் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அதனால், சீனா உள்ளிட்ட நாடுகள், இந்தியாவில் உருக்கு பொருட்களை குவித்து வருகின்றன. இதனால், உள்நாட்டு உருக்கு துறைக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில், 173 வகையான உருக்கு பொருட்களுக்கு, குறைந்தபட்ச இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், உருக்கு இறக்குமதி, முறையே, 15.5 மற்றும், 41 சதவீதம் சரிவடைந்துள்ளது. இது, உள்நாட்டு உருக்கு நிறுவனங்களின் வர்த்தகத்தை ஊக்குவித்துள்ளது. அதேசமயம், உலக நாடுகளில், குறிப்பாக சீனாவில், உருக்கு உற்பத்தி திறன் அதிகரித்து வருவதையும், உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|