பதிவு செய்த நாள்
21 ஜூன்2016
00:03
புதுடில்லி : மத்திய அரசு, நேற்று அதிரடியாக, அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகளை தளர்த்தியது. விமானம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் அன்னிய நேரடி முதலீடு, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலை வாய்ப்புகளை அதிகரித்து, புதிய தொழில்களை உருவாக்கும் நோக்கில், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பாதுகாப்பு, உள்நாட்டு விமான போக்குவரத்து, மருந்து, ‘சிங்கிள்’ பிராண்டு சில்லரை விற்பனை, ஒளிபரப்பு உட்பட, பல்வேறு துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. பெரும்பான்மையான துறைகளில், அரசு ஒப்புதலின்றி, ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்ய, தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அன்னிய நிறுவனங்கள், ஆர்வத்துடன் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரும்.
கடந்த, இரண்டு ஆண்டுகளில், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகளை, மத்திய அரசு, இரண்டாவது முறையாக தளர்த்தியுள்ளது. இத்தகைய சீர்திருத்தங்களால், உலகளவில், அன்னிய முதலீடுகளுக்காக, பொருளாதார வாசலை தாராளமாக திறந்து விட்டுள்ள நாடாக, இந்தியா உருவெடுத்துள்ளது. கடந்த, 2013–14ம் நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீடு, 3,604 கோடி டாலராக இருந்தது. இது, மத்திய அரசின் நடவடிக்கைகளால், 2015 – 16ல், 5,546 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஒரு நிதியாண்டில், இந்த அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது, இதுவே முதன்முறையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முக்கிய அம்சங்கள்* பாதுகாப்பு துறையில், சிறிய ஆயுதங்கள், வெடிமருந்துகள் தயாரிப்பு பிரிவுகளில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி* விமான நிலையங்களின் விரிவாக்க திட்டங்களில், அரசு ஒப்புதலின்றி, 100 சதவீத முதலீட்டிற்கு அனுமதி* விமான போக்குவரத்து துறையில், 100 சதவீத முதலீடு * மருந்து துறையில், விரிவாக்க திட்டங்களில், நேரடியாக, 74 சதவீத முதலீட்டிற்கு அனுமதி* ‘சிங்கிள்’ பிராண்டு சில்லரை விற்பனையில், நவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை உள்நாட்டில் கொள்முதல் செய்வதற்கான விதிமுறை தளர்வு* கேபிள் நெட்ஒர்க், டி.டி.எச்., மொபைல் ‘டிவி’ துறைகளில், 100 சதவீத முதலீட்டிற்கு அனுமதி.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|