பதிவு செய்த நாள்
22 ஜூன்2016
01:03
புதுடில்லி : ‘நாட்டின் தொழில் துறையில் புதிய முதலீடுகள் மேற்கொள்வதில் ஆர்வம் இல்லாத சூழல் காணப்படுகிறது’ என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பான – ‘பிக்கி’ தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு, இந்தாண்டு, ஏப்., – செப்., வரையிலான காலத்தில், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள், எதிர்பார்ப்புகள் குறித்து, நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தியது.
அதன் அடிப்படையில் பிக்கி வெளியிட்ட ஆய்வறிக்கை விவரம்: ஆய்வில் கலந்து கொண்டோரில், 64 சதவீதத்தினர், சர்வதேச பொருளாதார நிலை கவலைக்குரியதாக உள்ளது என, தெரிவித்துள்ளனர். உலகளவில், பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதாகவும், இந்த நிலை எப்போதுமாறும் என, கூறுவது கடினமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.இந்திய தொழில் துறையில், புதிய முதலீடுகள் குவிய வாய்ப்பு உள்ளதாக, 35 சதவீதத்தினர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். இது, முந்தைய ஆய்வில், 41 சதவீதமாக இருந்தது. முதலீடுகளின் அளவில் எந்த மாற்றமும் இருக்காது என, 46 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தங்கள் துறைகளில் முதலீடுகளை ஈர்க்கமேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்பலன் இதுவரை தெரியவில்லை; இனி தான் தெரியும் என, பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், ராணுவம் மற்றும் சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில்வே,புதுப்பிக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில், அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக, பலர் கூறியுள்ளனர். முந்தைய அரையாண்டுடன் ஒப்பிடும்போது, நாட்டின் பொருளாதாரம், தொழில் மற்றும் நிறுவன செயல்பாடுகளில், ஓரளவு முன்னேற்றம் காணப்படுகிறது.
அதேசமயம், விற்பனை, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை என, பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.இத்தகைய மாறுபட்ட கருத்துகள் பதிவு செய்யப்பட்ட போதிலும், ஒட்டு மொத்த அளவில், மதிப்பீட்டு காலத்திற்கான தொழில் நம்பிக்கை குறியீடு, 56.7லிருந்து, 64.3 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இவ்வாறு பிக்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு, தற்போது அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகளை மேலும் தளர்த்தியுள்ளதால், தொழில் துறை முதலீடுகள் சூடுபிடிக்கும் என இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|