பதிவு செய்த நாள்
22 ஜூன்2016
01:03
புதுடில்லி : மத்திய அரசு, கடந்த எட்டு மாதங்களில், இரண்டாவது முறையாக, ‘எப்.டி.ஐ.,’ எனப்படும் அன்னிய நேரடி முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை, நேற்று முன்தினம் தளர்த்தியது. இதன் மூலம், உலகளவில் தாராளமான பொருளாதார சந்தை உள்ள நாடாக, இந்தியா உருவெடுத்துள்ளது.
இதனால், ‘‘இந்தியாவில், அமெரிக்காவின் முதலீடு மேலும் அதிகரிக்கும்,’’ என, அமெரிக்க – இந்திய வர்த்தக குழு தலைவர் முகேஷ் அகி தெரிவித்துள்ளார்.
மருந்து நிறுவனங்கள்அவர் மேலும் கூறியதாவது: சமீபத்தில், பிரதமர் மோடி, அமெரிக்கா சென்ற போது, அமேசான், ஸ்டார் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள், இந்தியாவில் 2.99 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தன. தற்போது எப்.டி.ஐ., விதிமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளதால், அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கனவே அறிவித்த முதலீடுகளை ஒரு துவக்கமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிட அதிகமாக முதலீடுகள் குவிய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, மருந்து நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களில், நேரடியாக முதலீடு செய்வதற்கான வரம்பு, 74 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதும், அதற்கு மேல், அரசு அனுமதியுடன், 100 சதவீதம் முதலீடு செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளதும் பாராட்டத்தக்கது. இதனால், மருந்து துறையில், அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு மேலும் அதிகரிக்கும்.
அதுபோல, பாதுகாப்பு, உள்நாட்டு விமான போக்குவரத்து, ஒளிபரப்பு சேவைகள் உள்ளிட்ட துறைகளிலும், எப்.டி.ஐ., விதிகளை தளர்த்தியுள்ளதால், அத்துறைகளில், அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்ய முன்வரும். ஸ்திரமற்ற உலகப் பொருளாதார சூழலிலும், இந்தியா தான் தொடர்ந்து, அன்னிய முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது. இரு ஆண்டுகளுக்கு முன், இந்திய பிரதமராக மோடி பதவியேற்றது முதல், நாட்டின் பொருளாதாரத்தில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகள்அடிப்படை கட்டமைப்பு துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும், எப்.டி.ஐ., குவியவும், சிவப்பு நாடா முறையை கட்டுப்படுத்தவும், மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்த திட்டங்கள் துணைபுரிகின்றன. திருத்தியமைக்கப்பட்ட திவால் சட்டமும், அன்னிய நிறுவனங்களின் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க உதவும்.உள்நாட்டில், வேலைவாய்ப்பை பெருக்கவும், பரஸ்பர தொழில்நுட்ப பரிமாற்றங்களை ஊக்குவிக்கவும், மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் துணை புரிந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|