பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
01:54
புதுடில்லி : ‘‘மத்திய அரசின் முயற்சியால், நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், நாட்டின் ஜவுளி துறை ஏற்றுமதி, 1.33 லட்சம் கோடி ரூபாயாக உயரும்,’’ என, இந்திய ஜவுளி தயாரிப்பாளர்கள் சங்கமான – சி.எம்.ஏ.ஐ.,யின் தலைவர் ராகுல் மேத்தா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: ‘மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை, திரும்ப வழங்கும்போது, மாநில அரசுகளுக்கு செலுத்தப்பட்ட வரியையும் கணக்கிட வேண்டும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, ஜவுளி துறை ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
சிறப்பு ஊக்கத் திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில், ஜவுளி துறையில், ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 73,150 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, ஏற்றுமதியை, இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தவும், மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, 6,000 கோடி ரூபாய்க்கு, சிறப்பு ஊக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறைக்கான, இந்த சிறப்பு ஊக்கத் திட்டத்திற்கு, கடந்த வாரம், மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால், ஜவுளி துறையில், மிக அதிக அளவிலான முதலீடுகள் குவியும் என்பதுடன், உற்பத்தி திறனும் அதிகரிக்கும்.
இதையடுத்து, தற்போது, 1.12 லட்சம் கோடி ரூபாயாக உள்ள, ஜவுளி துறையின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 1.33 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என,மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், சர்வதேச பொருளாதார மந்தநிலை, இந்திய ஜவுளி துறையை பாதித்துள்ளது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. இதனால், நடப்பு ஜூன் வரையிலான காலாண்டில், ஜவுளி துறை ஏற்றுமதி, 5 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு நிலவரமும் மந்தமாக உள்ளதால், ஜவுளி துறை வளர்ச்சி, ஏற்ற இறக்கமின்றி, நிலையாகவோ அல்லது பயன்பாடு, 2 சதவீதம் குறைந்தோ காணப்படும்.
பிரிட்டன் விவகாரம் பிரிட்டன் விவகாரம், இந்திய ஜவுளி துறைக்கு உடனடியாக எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது, பிரிட்டன், ஐரோப்பிய கூட்டமைப்புடன் செய்து கொள்ளும் வரி சார்ந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் இருக்கும். பிரிட்டன் விலகுவதால், இந்தியா – ஐரோப்பிய கூட்டமைப்பு இடையிலான, தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவது தாமதப்படும். ஒப்பந்தத்தை விரைந்து மேற்கொள்ள, மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஈரான் ஆயத்த ஆடைகள் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய். இதில், 60 சதவீதம், இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இது, இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு, சாதகமான அம்சமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|