பதிவு செய்த நாள்
04 ஜூலை2016
07:13
சம்பள கமிஷன் பரிந்துரைகள், ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சம்பள உயர்வை சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும் என நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை, மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதை அடுத்து, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பலனடைய உள்ளனர். இதன் பயனாக சம்பள உயர்வு மற்றும் அரியர்ஸ் மூலம் ரொக்கம் ஆகியவை கிடைக்க உள்ளது. அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு காரணமாக அவர்களின் வாங்கும் சக்தி அதிகரித்து அதற்கேற்ப நுகர்வும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.சம்பள உயர்வு மற்றும் போனஸ் கிடைக்கும் போது, அதிகம் செலவு செய்வது மற்றும் நீண்ட காலமாக வாங்க திட்டமிட்டுள்ள பொருட்களை வாங்குவதற்கான விருப்பம் ஏற்படுவது இயற்கையானது தான். எனினும், ஊழியர்கள் சம்பள உயர்வின் உற்சாகத்தால் செலவு செய்வதில் ஈடுபடுவதை விட, சரியான முறையில் திட்டமிட்டு முதலீட்டு நோக்கில் செயல்படுவதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர்.
நிதி திட்டமிடல்செலவுகளை தீர்மானிப்பதற்கு முன், முதலில் நிதி திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். தங்கள் நிதி சூழலை ஆய்வு செய்து, அதில் இடைவெளி உள்ள இடங்களை முதலில் நிரப்ப வேண்டும் என்கின்றனர். நீண்டகால நோக்கில் முதலீடு செய்வது மற்றும் ஏற்கனவே உள்ள கடனை அடைப்பது ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு கிரெடிட் கார்டு கடன் அல்லது தனிநபர் கடன் இருந்தால், முதலில் அதை முடிக்க பார்க்க வேண்டும். வீட்டுக்கடன் இருந்தால், கணிசமான ஒரு தொகையை செலுத்தி, கடன் காலத்தை குறைக்க வேண்டும்.அதேபோல அவசர கால நிதியில் கூடுதல் தொகையை சேர்க்க வேண்டும். இதுவரை அவசர கால நிதி உருவாக்கப்படவில்லை என்றால், அத்தகைய நிதியை உருவாக்க இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவசர கால நிதி என்பது எதிர்பாராத நெருக்கடியால் பாதிப்பு ஏற்படும் நேரத்தில் கைகொடுக்க கூடியது.
காப்பீடு பாதுகாப்புபோதுமான காப்பீடு இருக்கிறதா என ஆய்வு செய்து, தேவை இருந்தால், அதற்கேற்ப காப்பீட்டை அதிகமாக்கி கொள்ள வேண்டும். பொதுவாக, ஆண்டு சம்பளத்தில் 10 மடங்கு அளவு பாதுகாப்பு அளிக்கும், ‘டெர்ம் இன்சூரன்ஸ் தேவை’ என வலியுறுத்தப்படுகிறது. அதேபோல மருத்துவக் காப்பீட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.கடன் தவணை, காப்பீடு ஆகியவற்றுக்கு தேவையான ஒதுக்கீடு செய்த பிறகே, முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். முதலீட்டை தீர்மானித்த பிறகே பொருட்களை வாங்க வேண்டும் என்கின்றனர். கார் வாங்க விரும்பினாலும் சரி, ‘எல்.இ.டி., டிவி’ போன்ற ஆடம்பர பொருட்களை வாங்க விரும்பினாலும் சரி பொறுத்திருக்க வேண்டும்.
முதலீடுகள் நிதி இலக்குகளை சரி பார்த்து அதற்கேற்ப முதலீடுகள் அமைந்துள்ளனவா என பரிசீலிக்க வேண்டும். நீண்ட கால இலக்குகளுக்கு ஏற்ப மியூச்சுவல் பண்ட் அல்லது எஸ்.ஐ.பி., திட்டங்களை தேர்வு செய்யலாம். ரொக்கமாக தொகை கையில் வந்தால், மியூச்சுவல் பண்டில் உள்ள, ‘சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான்’ போன்றவையை பயன்படுத்திக்கொள்ளலாம். சமபங்கு மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய தயக்கம் இருந்தால் பி.பி.எப்.,ல் முதலீடு செய்வதை பரிசீலிக்கலாம். வைப்பு நிதிகளிலும் முதலீடு செய்யலாம். வரும் மாதங்களில் வட்டி குறைப்பு நிகழ வாய்ப்பிருப்பதால், வைப்பு நிதியில் முதலீடு செய்ய இது ஏற்ற தருணம்.
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புகிறவர்கள் பல விஷயங்களை பரிசீலிக்க வேண்டும். சொந்த நிதி கையில் இருக்கும் நிலையில் மற்றும் சரியான இருப்பிடத்தில் வீடு அமைந்திருக்கும் நிலையில் மட்டுமே வருங்கால முதலீட்டு ஆதாயத்திற்காக வீடு வாங்குவது ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது. அதே நேரத்தில் சொந்த உபயோகத்திற்காக வீடு வாங்க ஏற்ற தருணமாகவே இது அமைகிறது. வீட்டுக் கடன்கள் எம்.சி.எல்.ஆர்., கணக்கீடு முறையுடன் தொடர்பு கொண்டிருப்பதால், வட்டி விகித மாற்றத்தின் பலனை பெற முடியும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|