பதிவு செய்த நாள்
04 ஜூலை2016
07:23
மும்பை : ‘மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்திய ரியல் எஸ்டேட் துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை அதிகரித்துள்ளது; அதனால், ஒளிவுமறைவற்ற ரியல் எஸ்டேட் நடைமுறைகளை பின்பற்றும், முதல் நிலை நகரங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா, 36வது இடத்திற்கு முன்னேறியுள்ளது’ என, ஜோன்ஸ் லேங் லாசல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், சர்வதேச ரியல் எஸ்டேட் துறையின் வெளிப்படையான செயல்பாடுகள் குறித்த, ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன் விவரம்: இந்தியாவில், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில், ரியல் எஸ்டேட் துறை நடவடிக்கைகளில், வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. இத்தகைய சூழல் உள்ள, சர்வதேச முதல் நிலை நகரங்களில், இந்தியா, 36வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், முறையே, 39 மற்றும் 52வது இடங்களை பிடித்துள்ளன. இந்திய ரியல் எஸ்டேட் துறை தொடர்பாக கிடைக்கும் விவரங்கள், அசையா சொத்துகளின் பரிவர்த்தனை சார்ந்த நடைமுறைகள், ஒழுங்குமுறை மற்றும் சட்ட விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக அனைத்து நகரங்களிலும், ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படையான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இதற்கு, அனைத்து நில ஆவணங்களும், ‘டிஜிட்டல்’ முறைக்கு மாற்றப்பட்டு, ‘ஆன்லைன்’ மூலம் வெளியிடப்படுவது, முக்கிய காரணமாகும். மேலும், 2014ல், பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட, நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் சட்டம் காரணமாக, நிலம் வாங்கும் நடைமுறைகள் சுலபமாகியுள்ளன.
நில விற்பனையில், உரிமையாளருக்கு நல்ல விலை கிடைக்கிறது. ரியல் எஸ்டேட் துறை கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களும், அன்னிய நேரடி முதலீட்டிற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், இத்துறைக்கு வலுசேர்த்து உள்ளன. ரியல் எஸ்டேட் தகவல்களை பொதுமக்கள் அறிவதற்கான வசதி, ‘டிஜிட்டல்’ நில ஆவணங்கள், ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் துவக்கம் போன்ற, மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகள் பாராட்டத்தக்கது.
இந்நிலையில், 2016, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம், அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக அமலுக்கு வருகின்ற சூழலில், ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறையின் வெளிப்படை தன்மையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும். இதன் காரணமாக, 2016 – 18ம் ஆண்டுக்கான அடுத்த ஆய்வில், ரியல் எஸ்டேட் துறையின் வெளிப்படை தன்மையில், இந்தியா மேலும் சிறப்பான இடத்தை பிடிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|