பதிவு செய்த நாள்
17 ஜூலை2016
03:57
புதுடில்லி:கடந்த, 10 ஆண்டுகளாக, நாட்டின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை உயர்த்த, உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதால், இந்தியா, சமையல் எண்ணெய்க்கு, வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையிலும், அதிக அளவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக, இந்தியா விளங்குகிறது.
கடந்த, 2005 – 06ம் எண்ணெய் பருவத்தில், நாட்டின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, 2.80 கோடி டன்னாக இருந்தது. இது, 2014 – 15ல், 10 லட்சம் டன் சரிவடைந்து, 2.70 கோடி டன்னாக குறைந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம், வருவாய் உயர்வு, அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் பயன்பாடு ஆகிய சவால்களை சமாளிக்கும் அளவிற்கு, உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி உயரவில்லை. இதற்கு, ‘சீரற்ற பருவமழை தான் காரணம்’ என, அரசு கூறுகிறது.
‘எண்ணெய் வித்துக்கள் சாகுபடியில் போதிய வருவாய் இல்லை’ என, விவசாயிகள் புலம்புகின்றனர். ‘ஏராளமான விவசாயிகள், நெல், கோதுமை போன்ற மாற்றுப் பயிருக்கு மாறி விட்டனர்’ என, ஆமதாபாத் ஐ.ஐ.எம்., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த, 2004 – 12 வரை, கிராமப்புறங்களில் சமையல் எண்ணெய் பயன்பாடு, 40 சதவீதம் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில், 29 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, 7 சதவீதம் சரிவடைந்துள்ளது என, உணவு மற்றும் பொது வினியோக துறை தெரிவித்துள்ளது.
இத்தகைய காரணங்களால், நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில், மூன்றில் இரு பங்கு, இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த வகையில், அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் இறக்குமதியால், உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க, மத்திய அரசு, சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை அவ்வப்போது உயர்த்தி வருகிறது.
கடந்த, 2014 – 15ம் நிதியாண்டில், கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி வரி, 7.5 சதவீதத்தில் இருந்து, 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி வரி, 15 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்காத வரை, சமையல் எண்ணெய்க்கு, வெளிநாடுகளை சார்ந்திருப்பதை தவிர வேறு வழியில்லை. அதனால், சமையல் எண்ணெய் இறக்குமதி வரி உயர்த்தப்படும் போதெல்லாம், அந்த சுமை, நுகர்வோர் தலையில் தான் விழும் என்பதிலும், எவ்வித சந்தேகத்திற்கும் இடம் இல்லை.
கடந்த, 2014 – 15 எண்ணெய் பருவத்தில், சமையல் எண்ணெய் உற்பத்தி, 90 லட்சம் டன்; இறக்குமதி, 1.27 கோடி டன் என்ற அளவில் இருந்தது. இதன் மூலம், நாட்டின், 2.17 கோடி டன் சமையல் எண்ணெய் தேவை பூர்த்தி செய்து கொள்ளப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|