பதிவு செய்த நாள்
19 ஜூலை2016
03:46
புதுடில்லி : நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம், 7 – 8 சதவீதம் வளர்ச்சி காணும் என, இந்திய தொழிலக கூட்டமைப்பான – சி.ஐ.ஐ., வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: இந்தியாவின் வர்த்தகச் சூழல் குறித்து, 200க்கும் மேற்பட்ட, குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 60 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7 – 8 சதவீதமாக இருக்கும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளன. விற்பனை உயரும் என, 61 சதவீதம்; புதிய ‘ஆர்டர்’ அதிகரிக்கும் என, 65 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன. உள்நாட்டு வியாபாரம் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பால், ஏற்றுமதி கொள்கையை மாற்றமின்றி கடைபிடிக்க விரும்புவதாக, பல நிறுவனங்கள் தெரிவித்துஉள்ளன.
கடந்த ஜூன் வரையிலான காலாண்டில், பல நிறுவனங்கள், முதலீட்டு திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக கூறியுள்ளன. பொருட்களுக்கான தேவை எப்போது உயரும் என, தெரியாத சூழலில், உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை என, 50 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதனால், அவை, உள்நாட்டு முதலீடுகளை தற்போதுள்ளவாறே தொடர விரும்புகின்றன. அதுபோல, சர்வதேச சூழல் சரியில்லாததால், 60.5 சதவீத நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீடுகளில் மாற்றம் செய்யும் திட்டமில்லை என, கூறியுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த, ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், சி.ஐ.ஐ., வர்த்தக நம்பிக்கை குறியீடு, 57.2 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய காலாண்டில், 54.1 ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|