பதிவு செய்த நாள்
20 ஜூலை2016
04:40
மும்பை : ‘நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், 6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,000 கோடி டாலராக அதிகரிக்கும்’ என, ‘இக்ரா’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்: கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், ஜவுளி துறையின் பல்வேறு பிரிவுகள் சிறப்பான வளர்ச்சி கண்டிருந்தன. எனினும், பருத்தி, பாலியஸ்டர் ஆகியவற்றின் விலையில் ஏற்பட்ட சரிவால், ஜவுளி ஏற்றுமதி வளர்ச்சி, மதிப்பின் அடிப்படையில், 2 சதவீதம் பின்னடைவைக் கண்டிருந்தது. நடப்பு நிதியாண்டில், ஜவுளி துறையை ஊக்குவிக்கும் நோக்கில், மத்திய அரசு, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. இதனால், ஜவுளி துறை, சிறப்பான வளர்ச்சி காணும் என, தெரிகிறது. கடந்த மே மாதம், பருத்தி மற்றும் பாலியஸ்டர் விலை, முறையே, 10 மற்றும் 4 சதவீதம் சரிவடைந்தது. அதனால், ஜவுளி துறையின் ஏற்றுமதி மதிப்பு குறைந்தது.
நடப்பு நிதியாண்டில், ஏப்., – மே மாதங்களில், ஜவுளி துறையின் ஏற்றுமதி மதிப்பு, கடந்த ஆண்டு இதே காலத்தில் காணப்பட்டதை விட, 6 சதவீதம் குறைந்து, 610 கோடி டாலரில் இருந்து, 570 கோடி டாலராக சரிவடைந்தது. தற்போது, உள்நாட்டிலும், சர்வதேச சந்தையிலும் பருத்தி மற்றும் நுாலிழை விலை அதிகரித்துள்ளது. இதனால், ஜவுளி துறை சார்ந்த நிறுவனங்களின் உற்பத்திச் செலவு அதிகரித்து, ஜவுளி வகைகள், ஆயத்த ஆடைகள் ஆகியவற்றின் விலை உயர்ந்து உள்ளது. ஜவுளி, ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால், அவற்றின் ஏற்றுமதி குறையும் என்ற போதிலும், ஏற்றுமதி மதிப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர்த்து, ஜவுளி துறையின் இதர பிரிவுகளின் ஏற்றுமதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குறிப்பாக, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நன்கு இருக்கும் என்ற மதிப்பீடு, ஒட்டுமொத்த ஜவுளி துறை வளர்ச்சிக்கு துணை புரியும்.
நடப்பு நிதியாண்டில், துண்டுகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியும் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில், ஜவுளி துறையின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,000 கோடி டாலரை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|