பதிவு செய்த நாள்
25 ஜூலை2016
07:29
சிக்கனத்தின் அருமையையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்ந்திருந்தாலும் பலரால் செலவுகளை கட்டுப்படுத்த முடிவதில்லை. எதிர்கால நலனுக்கு என்று போதுமான தொகையை எடுத்து வைக்க முடியாமல் நிகழ் கால வசதிகளிலேயே பணத்தை செலவிடுகின்றனர். இதற்கு காரணம் அலட்சியமோ, அறியாமையோ அல்ல; மாறாக எதிர்கால வளம் மீதான நம்பிக்கை என்கிறார் சர்வதேச தனிநபர் நிதி வலைப்பதிவாளரான டிரெண்ட் ஹாம்.
எதிர்கால தடைகள்
எதிர்கால வளம் மீதான நம்பிக்கை இயல்பானது தான். தொடர்ந்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்போம், பணி அல்லது தொழிலில் மேம்பாடு உண்டாகும் மற்றும் வாழ்க்கை சீராக இருக்கும் ஆகிய எதிர்பார்ப்புகளே இந்த நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைகின்றன. ஆனால், இந்த எதிர்பார்ப்புகள் அப்படியே நிறைவேறும் என்பது நிச்சயமில்லை. எதிர்பாராத சோதனைகளும் வரலாம். அந்த சூழலில் நிகழ்கால செலவுகள் எதிர்கால சுமையாக மாறிவிடலாம்.
நிதி பாதிப்பு
வாழ்க்கையில் நம்பிக்கை அவசியம் தான். ஆனால், வளமான செல்வத்தின் எதிர்பார்ப்பில், இப்போது அதிகமாக செலவு செய்வது உண்மையில் எதிர்கால நிதி நிலையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதற்காக அவநம்பிக்கை கொள்ள வேண்டும் என்றோ, செலவே செய்யக்கூடாது என்றோ அர்த்தம் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட மேம்பட்ட வழியை நாட வேண்டும்!
கொஞ்சம் கவனம்
மனதில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடன், இப்போதுள்ள நேரம், பணம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றில் ஒரு பகுதியை எதிர்கால நலனுக்காக செலவிட வேண்டும். ஆடம்பர செலவுகளை தவிர்த்து, தேவையானவற்றில் மட்டும் பணத்தை செலவிட வேண்டும். இதன் மூலம் எதிர்கால சுமையை குறைத்துக் கொள்ளலாம்.இன்றைய புத்திசாலித்தனமான முடிவு வருங்காலத்திற்கு வழிகாட்டும் ஒளியாகும்!
வருங்கால சம்பளம்
பலரும் தங்கள் நிகழ் கால சம்பளத்தின் அடிப்படையில் மட்டும் செலவு செய்வதில்லை. தொடர்ந்து வரக்கூடிய சம்பள உயர்வு உள்ளிட்ட முன்னேற்றம் உண்டாக்கித்தர வல்ல எதிர்கால வளத்தின் நம்பிக்கையிலும் தான் கொஞ்சம் தாராளமாகவே செலவு செய்கின்றனர். இப்போதுள்ளதை விட வருங்காலத்தில் அதிக செல்வம் வரும் எனும் நம்பிக்கை அவர்களை இயக்குகிறது.
நிதி சுதந்திரம்
இப்படி செலவுகளை கட்டுப்படுத்தி வாழும் நிலையில், எதிர்பார்த்தது போலவே வருங்காலம் வளமானதாக அமைந்தால், அது இரட்டிப்பு போனசாக அமையும். அப்போது கையில் கூடுதலாக செல்வம் இருக்கும். நிதிச்சுமையில் இருந்து விடுபட்டு நிதி சுதந்திரத்தையும் அனுபவிக்கலாம். முன் கூட்டியே ஓய்வு பெறுதல் உள்ளிட்ட கனவுகள் சாத்தியமாகும். எனவே, எதிர்கால வளம் பற்றிய எதிர்பார்ப்பில் வீண் செலவு செய்வதைவிட, வருங்கால பாதுகாப்பிற்காக கவனமாக செலவு செய்யலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|