பதிவு செய்த நாள்
25 ஜூலை2016
07:30
இந்திய பொருளாதார வளர்ச்சியின் மீட்சி மேலும் பரவலான தன்மையுடன் இருப்பதாக சர்வதேச நிதிச்சேவைகள் குழுமமான மார்கன் ஸ்டான்லி அறிக்கை தெரிவிக்கிறது.
உள்நாட்டு பொருளாதாரம் ஒட்டுமொத்த நோக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேம்பட்டிருக்கிறது என்றும், அரசின் முதலீடு மற்றும் அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றின் காரணமாக ஒட்டுமொத்த நோக்கிலான நிலை மற்றும் வளர்ச்சியில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக சர்வதேச நிதிச்சேவைகள் குழுமமான மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் வரை முடிந்த காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சியின் மீட்சி மேலும் பரவலாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
நுகர்வு செலவுகள் அதிகரித்திருப்பதே இந்த மேம்பாட்டிற்கு காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நுகர்வு செலவுகள் அதிகரித்திருப்பது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. ஏனெனில், 2012ம் ஆண்டில் இருந்து இது மிகவும் பலவீனமாக இருந்து வந்துள்ள நிலையில், தற்போது இது அதிகரித்திருப்பது நல்ல அறிகுறியாகும்.
வளர்ச்சி விகிதம்இந்த தரவுகளின் அடிப்படையில், மார்கன் ஸ்டான்லியின், ‘குளோபல் மேக்ரோ சம்மர் அவுட்லுக்’ அறிக்கையில், 2016ல் இந்திய பொருளாதாரத்திற்கான வளர்ச்சி கணிப்பு 7.5 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல 2017ம் ஆண்டுக்கான வளர்ச்சி கணிப்பு 7.7 சதவிதத்தில் இருந்து 7.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.ஜி.டி.பி., எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தி புள்ளிவிபரங்கள் மற்றும் பரவலாக நம்பிக்கை அளிக்கும் ஒட்டுமொத்த சூழல் ஆகியவை இதற்கு அடிப்படையாக அமைந்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரெக்ஸிட் பாதிப்புஇந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்பான நம்பிக்கை அளிக்கும் அம்சங்களின் அடிப்படையில் வளர்ச்சிக்கான கணிப்பு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பிரெக்ஸிட் பிரச்னை தாக்கம் செலுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவு பிரெக்ஸிட் என்று குறிப்பிடப்படுகிறது. இதன் தாக்கம் உலகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு முன்னதாக 30 சதவீதமாக இருந்ததில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவிலும் வர்த்தகம் மற்றும் நிதி பிரிவுகளில் பாதிப்பு இருக்கும் என்றாலும், இது மற்ற நாடுகளின் பாதிப்பை ஒப்பிடும் போது குறைவாகவே இருக்கும். பிரிட்டனுக்கான இந்தியாவின் ஏற்றுமதி குறைவாகவே உள்ளது.
மேலும் ஒட்டுமொத்தமான நிலைமையின் ஸ்திரத்தன்மை இந்த பாதிப்பை குறைக்கும். உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் அரசின் முதலீடு மற்றும் அந்நிய நேரடி முதலீடு காரணமாக பொருளாதார வளர்ச்சியில் மீட்சி ஏற்பட்டுள்ளது. இவற்றோடு நுகர்வும் மேம்படத் துவங்கியிருக்கிறது.மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் சந்தையின் வருவாயில் பரவலான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சில்லரை கடன் வளர்ச்சி, பெட்ரோல் நுகர்வு, நுகர்பொருள் உற்பத்தி ஆகியவற்றால் நுகர்வில் மேம்பாடு ஏற்பட்டு வருகிறது. அதிகரிக்கும் இரு சக்கர வாகன உற்பத்தி, கிராமப்புற நுகர்வு மேம்பட்டு வருவதை உணர்த்துகிறது.
உருக்கு மற்றும் சிமென்ட் ஆகியவற்றின் தேவையும் அதிகரித்து நகர்புறங்களில் வீடுகளின் விற்பனையும் உயர்ந்துள்ளது.எனினும், மற்ற நாடுகளின் சந்தையில் தேவை மந்தமாவது மற்றும் தனியார் முதலீட்டில் சுணக்கம் ஆகியவை வளர்ச்சிக்கான தடைகளாக இருக்கும் என கருதப்படுகிறது. மொத்த முதலீட்டில் 22 சதவீதமாக அமையும் தனியார் துறை முதலீடு கடந்த 4 ஆண்டுகளில் பலவீனமாகவே இருந்து வருகிறது. தனியார் முதலீடு மேம்படாமல் இருக்கும் நிலைக்கு, வெளிச்சந்தையின் மந்த நிலை, நிறுவனங்களின் விலை ஆற்றல் குறைவு, வங்கித்துறையின் பலவீனமான பாலன்ஸ் ஷீட் ஆகியவை காரணமாக அமைந்துள்ளன.
வட்டி குறைப்புஇந்த மேம்பட்ட சூழல் உற்பத்தி அதிகரிக்க மற்றும் பணவீக்கம் குறைய வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2017 மார்ச் காலாண்டில் பணவீக்கம் 4.5 சதவீதமாக குறைய வாய்ப்பு இருக்கிறது. பணவீக்கத்திற்கு வித்திடும் அம்சங்கள் கட்டுக்குள் உள்ளன. இவற்றின் காரணமாக ரிசர்வ் வங்கி, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மேலும் வட்டி குறைப்பை அறிவிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு மேலும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|