பதிவு செய்த நாள்
31 ஜூலை2016
04:34
பெங்களுரு;வலைதளம் வாயிலாக புதுமையான தொழில்களில் ஈடுபடும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், முந்தைய ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில், 2015 –16ம் நிதியாண்டில், ஏஞ்செல் முதலீட்டாளர்கள், 113.60 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.அதிக முதலீடு தேவைப்படும், புதிய தொழில்களில், ‘வென்சர் கேப்பிடல்’ எனப்படும் துணிகர முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன.
குறைந்த முதலீடு தேவைப்படும் புதிய தொழில்களில், ‘ஏஞ்செல் முதலீட்டாளர்கள்’ எனப்படும், பெரும் பணக்காரர்கள் முதலீடு செய்கின்றனர். இந்த வகையில், அதிக முதலீடின்றி, குறைந்த பணியாட்களுடன், வலைதளம் வாயிலாக வர்த்தகம் புரியும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், ஏஞ்செல் முதலீட்டாளர்கள், ஆர்வமுடன் முதலீடு செய்து வருகின்றனர். நுகர்வோர் சார்ந்த, வலைதளம் மற்றும் மொபைல்போன் சேவை, மின்னணு வர்த்தகம், உணவுத் தொழில் ஆகிய மூன்று துறைகளில் முதலீடு செய்வதற்குத் தான், ஏஞ்செல் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இன்னோவென் கேப்பிடல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:கடந்த நிதியாண்டில், ஏஞ்செல் முதலீட்டாளர்கள், 69 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 113.60 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இது, முந்தைய நிதியாண்டை விட, எண்ணிக்கையில் 47 சதவீதம்; மதிப்பில், 62 சதவீதம் அதிகம். கடந்த, 2014–15ம் நிதியாண்டில், 47 ஒப்பந்தங்கள் மூலம், 70 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த நிதியாண்டில், ஏஞ்செல் முதலீடுகளை பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 46 சதவீத நிறுவனங்கள், மீண்டும் முதலீடுகளை திரட்டவில்லை. அதே சமயம், 32 சதவீத நிறுவனங்கள், தொடர் முதலீடுகளை திரட்டிஉள்ளன. முதலீடுகளை திரட்டுவதற்கு முன், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்த சராசரி மதிப்பீடு, 2015–16ம் நிதியாண்டில், 10 சதவீதம் உயர்ந்து, 9.96 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2014–15ல், 9 கோடி ரூபாயாக இருந்தது. 24 சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மதிப்பு, 20 – 30 கோடி ரூபாய் என்ற அளவில் காணப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|