பதிவு செய்த நாள்
31 ஜூலை2016
23:45
வாழ்க்கையில் கவனத்தை அதிகரித்து, கவனச்சிதறலை குறைத்து, நாம் யார் என்பதை அறிவதிலும், நம்முடைய திறமைகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவும் வழி காட்டுகிறது, பீட்டர் பிரெக்மனின், ‘18 மினிட்ஸ்’ புத்தகம்: நம்மில் பலர் அளவுக்கு அதிகமான செயல்களை வைத்துக்கொண்டு, அவற்றை ஏன் செய்கிறோம் என ஒரு நிமிடம் கூட யோசிக்காமலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஒரு நிமிடம்: முதலில் ஒரு நிமிடம் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு அமைதியாக இருங்கள். எதையும் செய்வதற்கு முன் அதன் பலனை நினைத்துப் பார்த்து உங்கள் புரிதலை விரிவாக்கி கொள்ளவும். இதன் மூலம் தவறவிட்டு வரும் வாய்ப்புகளை கண்டறியலாம். செல்ல விரும்பாத இடத்தை நோக்கி நீங்கள் சென்று கொண்டிருப்பதை அனுமதிக்காதீர்கள். உங்களை நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றிக் கொள்ளுங்கள். வேலையுடன் மட்டும் உங்களை தொடர்புபடுத்திப் பார்ப்பதை கைவிடவும். அதை கடந்தும் உங்கள் அடையாளம் இருக்கிறது.
மூன்று கேள்விகள்: நம்முடைய எல்லா தேர்வுகளுக்கும் ஒரு பலன் உண்டு. ஒரு விலை உண்டு. எது சரியான தேர்வு என அறிய வேண்டும். 1. இந்த ஆண்டின் அர்த்தம் என்ன? 2. இந்த நாளின் அர்த்தம் என்ன? 3. இந்த நொடியின் அர்த்தம் என்ன? எது முக்கியம் என்பதை அறிவதற்கு நீண்ட கால மற்றும் இடைப்பட்ட காலத்தில் நாம் அடைய விரும்புவது என்ன என்பதை அறிந்து கொள்வதாகும். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நாம் எப்படி இருக்க விரும்புகிறோம் என கேட்டு பதில் தேட வேண்டும். இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் அன்றாடம் செய்து கொண்டிருக்கும் பல செயல்கள் நம் வாழ்க்கையில் எந்த தாக்கமும் செலுத்தாததாக அமைந்திருக்கும்.
இது, இன்றைய நாள் மீது கவனத்தை கொண்டு வரும். வாழ்க்கையில் நமக்கு தேவையான பெரிய விஷயங்கள் என்ன என்பது பற்றி தெளிவு ஏற்பட்டு விட்டால், தினமும் செய்யும் விஷயங்களை அதற்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை ஆகியவற்றின் பட்டியல் நம் முன் இருக்கும். நீண்ட கால நோக்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களால் நம்மை சுழலச்செய்து கொள்ள வேண்டும்.
முன்னுரிமை: நமக்குள் இருக்கும் காம்பளக்சை மாற்றி அமைத்து, இலக்கிற்கு தேவையானவற்றுக்கு முன்னுரிமை அளிக்கச் செய்வதன் மூலம் அர்த்தமுள்ளவற்றை செய்யலாம். வெற்றியை நோக்கி முன்னேற தடையாக இருப்பது குகை பார்வை, தோல்வி பற்றிய அச்சம் மற்றும் அவசரப்பட்டு முடிவெடுப்பது ஆகியவை ஆகும்.ஒவ்வொரு நாளின் முடிவிலும் அன்றைய தினம் செய்வதற்றை ஆய்வு செய்யுங்கள். உங்கள் கவனம், இலக்கு மற்றும் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்கள் இருந்தனவா என கேட்டுக்கொள்ளுங்கள். இன்று என்ன கற்றுக்கொண்டோம் என யோசியுங்கள். நாளை மாற்றம் செய்ய வேண்டுமா? என யோசித்துப் பாருங்கள்.
உங்கள் இலக்கை நோக்கி முன்னேற தேவையான செயல்களில் கவனம் செலுத்துவது முக்கியம். அதே நேரத்தில் இலக்கிற்கு உதவாத செயல்களை தவிர்ப்பதும் முக்கியம். வேண்டாம் என சொல்லி மறுக்க கற்றுக்கொள்வது கவனச்சிதறலை வெல்வதற்கான எளிய வழியாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|