பதிவு செய்த நாள்
06 ஆக2016
02:09
‘சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருவதால், ஒரு முனை வரியை எளிதாக கட்டி, நிம்மதியாக தொழில் செய்யலாம். வரி ஏய்ப்புகள் குறையும்; நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்’ என, தொழில் முனைவோர், வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.நாட்டில் உற்பத்தி வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரியான, ‘வாட்’ என்ற பல முனை வரி விதிப்புகள் உள்ளன. இது, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுவதால், வணிகர்களுக்கு சிக்கல் ஏற்படுவதுடன், வரி ஏய்ப்புக்கும் வழி வகுத்து விடுகிறது. இதை கருத்தில் கொண்டு, ஒரு முனை வரி விதிப்பான, ஜி.எஸ்.டி.,யை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ராஜ்யசபாவிலும், ஒப்புதல் கிடைத்துவிட்டதால், விரைவில் அமலுக்கு வர உள்ளது. இதை, தொழில் முனைவோர், வணிகர்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் சங்க தலைவர் ஜி.சங்கரன்: பல விதமான வரிகளை கட்டுவதும், அதற்கான கணக்கு, வழக்குகளை பராமரிப்பது பெரும் சிரமமாக இருந்தது; இனி அந்த நிலை நீங்கும். ஒரு முனை வரி என்பதால், எளிதாக வரியை செலுத்தி, நிம்மதியாக தொழில் செய்யலாம். மாநிலங்களுக்கு இடையே வரி வேறுபாடு இருக்காது.
ஜி.எஸ்.டி., நாட்டின் வளர்ச்சிக்கானது; அதே நேரத்தில், இந்த வரி விதிப்பு, 15 சதவீதத்திற்கு மேல் போகாமல் இருப்பது நல்லது.சென்னை தொழில் வர்த்தக சபையின், ‘லாஜிஸ்டிக் கமிட்டி’ முன்னாள் தலைவர் ஜெ.கிருஷ்ணன்: நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் பயனுள்ள நடைமுறை. இதை விரைந்து செயல்படுத்த வேண்டும். அதே நேரத்தில், தமிழகம் போன்ற நிதி பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு, இது மேலும் நிதி சிக்கலை ஏற்படுத்தி விடாத வகையில், செயல்படுத்த வேண்டும்.தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா: உற்பத்தி பொருளுக்கு, ஒரு இடத்தில் மட்டுமே வரி இருக்க வேண்டும்; எல்லா இடங்களிலும் பின்தொடரக்கூடாது.
ஜி.எஸ்.டி., எனும் ஒரு முனை வரியால், வரி ஏய்ப்பு குறையும்; நாட்டின் வரி வருவாய் அதிகமாகும். சட்ட விதிகளை எளிமைப்படுத்தி செயல்படுத்த வேண்டும்; குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருத்தல் கூடாது.
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க மாநில தலைவர் எஸ்.பி.ஜெயபிரகாசம்: ஒரு முனை வரி விதிப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், தமிழகத்தில், 589 பொருட்களுக்கு வரி இல்லை. தற்போது, 100 பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு என்றால் குழப்பமாகும். சிறு வணிகர் பாதுகாப்பும் கருத்தில் கொள்ள வேண்டும். பிரத்யேக கமிட்டி அமைத்து, வணிகர்களின் கருத்து கேட்டு, அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|