பதிவு செய்த நாள்
06 ஆக2016
02:11
புதுடில்லி:ஆடம்பர கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையை அதிகரிக்க, புதுப் புது உத்திகளை பயன்படுத்த துவங்கியுள்ளன. இந்தியாவில், ஆடம்பர கார் சந்தையில், மெர்சிடஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ., ஜாகுவார் லேண்டு ரோவர், வால்வோ ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றின் மொத்த கார் விற்பனை, ஆண்டுக்கு, 35 ஆயிரம் என்ற அளவில் மிகக்குறைவாக உள்ளது. இதற்கு பெரு நகரங்களில் மட்டும், குறைந்த அளவில் முகவர்கள் உள்ளது தான் காரணம் என, இந்நிறுவனங்கள் கருதுகின்றன. அதனால், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும், ஆடம்பர கார்களின் விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வகையில், ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனம், கடந்த ஆண்டு, ‘மொபைல் டெர்மினல்’ என்ற நடமாடும் கார் விற்பனை நிலையத்தை அறிமுகப்படுத்தியது. நிரந்தர கட்டடத்தில் இயங்கும் ஷோரூம் போல, இந்த மொபைல் டெர்மினல், அனைத்து வசதிகளுடன் ஊர் ஊராக சென்று, ஆடி காரின் சிறப்பம்சங்களை எடுத்து கூறியது. அத்துடன், ஆடி காரை சோதனை அடிப்படையில் ஓட்டிப் பார்க்கவும் அனுமதி வழங்கியது. ஆக்ரா, அமிர்தசரஸ், அம்பாலா, ஹிசார், முசாபர்நகர், சஹரன்பூர், மீரட், அலிகர் உள்ளிட்ட நகரங்களில், மொபைல் டெர்மினல், 7 – 10 நாட்கள் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டது. இதன் மூலம், சிறிய நகரங்களில் உள்ளோரும் முதன்முதலாக, ஆடம்பரமான ஆடி காரை ஓட்டிப் பார்த்து, வாங்கும் வாய்ப்பை பெற்றனர். கடந்த ஆண்டு இந்நிறுவனம், 11 ஆயிரம் ஆடம்பர கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தாண்டு, 20 நகரங்களில், இது போன்ற பிரசாரங்களுடன் கூடிய விற்பனை உத்தியை பின்பற்ற, ஆடி நிறுவனம் திட்டமிட்டுஉள்ளது.
ஆடி நிறுவனத்தை பின்பற்றி, மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனமும், முகவர்கள் இல்லாத இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், ‘பாப் அப் ஸ்டோர்’ என்ற, நடமாடும் விற்பனை அங்காடியை திறக்க உள்ளது. பெரு நகரங்களில் உள்ள, மெர்சிடஸ் கார் ஷோரூம் போன்ற வடிவமைப்புடன் இந்த ஸ்டோர் இருக்கும். இங்கு கார் விற்பனையுடன், பழுதுப்பார்ப்பு சேவை, உதிரிபாகங்கள் விற்பனையும் நடைபெறும்.
இந்த நடமாடும் பாப் அப் ஸ்டோர், ஒரு நகரில் அதிகபட்சம், 10 நாட்கள் இருக்கும். காரை ஓட்டிப் பார்த்து வாங்கும் வசதியையும், மெர்சிடஸ் அளிக்கிறது. நடமாடும் பாப் அப் ஸ்டோர், பிரித்தெடுத்து, இணைக்கும் வசதி கொண்டதாக உருவாக்கப்பட்டு உள்ளது. அதனால், ஒரு இடத்தில் இருந்து வேறிடத்திற்குச் செல்லும் போது, சுலபமாக விற்பனையகத்தை அமைக்கலாம். இந்நிறுவனம் கடந்த ஆண்டு, 13,558 கார்களை விற்பனை செய்துள்ளது.
இதேபோல, வால்வோ, பி.எம்.டபிள்யூ., ஜே.எல்.ஆர்., உள்ளிட்ட ஆடம்பர கார் நிறுவனங்களும், சிறிய நகரங்களை குறிவைத்து களத்தில் குதிக்க உள்ளன.இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், செலவழிப்பு வருவாய் பெருகி வருகிறது. நிலச்சுவான்தார் உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள், ஆடம்பர கார்களில் பயணிப்பதை கவுரவமாக கருதுகின்றனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|