பதிவு செய்த நாள்
08 ஆக2016
07:15
ஆதார் அட்டை அடிப்படையிலான டிஜிட்டல் கையெழுத்து மூலம் இணையம் வழியாக புதிய பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது. நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி, காகித பரிவர்த்தனை இல்லாமல் இணையம் மூலம் பான் கார்டு பெறலாம்.
பெரும்பாலான நிதிச்சேவைகளை பெற மற்றும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு அவசியம். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பல பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு எண்ணை குறிப்பிடுவது அவசியம் ஆகியுள்ளது.பல பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டை கட்டாயமாக்கியுள்ளதோடு, பான் கார்டு பெறுவதையும் அரசு எளிதாக்கியுள்ளது. இணையம் மூலம் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். பான் கார்டு வழங்கும் என்.எஸ்.டி.எல்., மற்றும் ‘மையுடிஐடிஎஸ்எல்’ இணையதளம் மூலம் பான் கார்டு பெற விண்ணபிக்கலாம். ஆனால், தேவையான ஆவணங்களை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
கடந்த செப்டம்பர் மாதம், டிஜிட்டல் கையெழுத்து சான்றிதழ் மூலம் பான் கார்டு பெற விண்ணப்பிக்கும், ‘49 ஏ’ விண்ணப்ப படிவ வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது, ஆதார் அடையாள அட்டை அடிப்படையிலான டிஜிட்டல் கையெழுத்து மூலம் பான் கார்டு பெற விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் ஆகியுள்ளது. பான் கார்டு பெற தேவையான அடையாள சான்றிதழ், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றுக்கான ஆவணமாக ஆதார் அடையாள அட்டையே கருதப்படும். பான் கார்டு வழங்கும்
அமைப்புகளின் இணையத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, புகைப்படம் மற்றும் ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றை ஸ்கேன் செய்து, இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள முறைக்கு ஏற்ப பதிவேற்ற வேண்டும். டிஜிட்டல் லாக்கரில் கணக்கு இருந்தால் அதிலிருந்தும் தகவல்களை பெற்று சமர்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் 107 ரூபாய். வெளிநாட்டில் வசிக்கும் முகவரி கொண்டவர்கள் 994 ரூபாய் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பாங்கிங் மூலம் இதை செலுத்தலாம். சிறிய அளவு சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.பான் கார்டு பெற விண்ணப்பிக்கும் நபர் முறையான டிஜிட்டல் கையெழுத்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர் அல்லது அவரது பிரதிநிதி பெயரில் இது அமைந்திருக்க வேண்டும்.
மைனர்கள் சார்பில் விண்ணப்பிக்கும் போது அவரது ஆதார் அடையாள அட்டை எண்ணே குறிப்பிடப்பட வேண்டும். டிஜிட்டல் கையெழுத்து வசதியை பயன்படுத்த ஆதார் எண் மூலம் விண்ணப்பித்து, இதற்கான டிஜிட்டல் கையெழுத்து சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்: http://cca.gov.in/ccaஇந்த முறையில் விண்ணப்பிப்பது மிகவும் எளிதாக அமையும் என கருதப்படுகிறது. காகித வடிவிலான ஆவணங்களுக்கான தேவையில்லாமல் இந்த நடைமுறை செயல்படுகிறது. மேலும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படுவது போலி பான் கார்டுகளை கட்டுப்படுத்தவும் உதவும் என கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|