பதிவு செய்த நாள்
11 ஆக2016
07:10
பெங்களூரு : ‘உணவுப் பொருட்களின் விலை உயர்வால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தாண்டு ஜூலை மாதம், நாட்டின் சில்லரை பணவீக்கம், 5.90 சதவீதமாக உயர்ந்திருக்கும்’ என, ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இந்நிறுவனம், பணவீக்கம் குறித்து, பொருளாதார நிபுணர்கள், 30 பேரின் கருத்துகளை கேட்டறிந்தது. அவர்கள், ‘பல்வேறு உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால், ஜூலையில் சில்லரை பணவீக்கம், 5.90 சதவீதமாக உயர்ந்திருக்கும்’ என, தெரிவித்துள்ளனர்.
கட்டுக்குள் வரும்இந்தாண்டு ஜூன் மாதத்தில், சில்லரை பணவீக்கம், 5.77 சதவீதமாக உயர்ந்திருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், ஜூலையில் பணவீக்கம் அதிகரித்திருக்கும் என்ற போதிலும், அது, பிரேசில் போன்ற நாடுகளைப் போல, தொடர்ந்து அதிகரிக்கவில்லை என, ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ரிசர்வ் வங்கி, வரும், 2017 மார்ச்சில், சில்லரை பணவீக்கத்திற்கான இலக்கை, 5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், சில்லரை பணவீக்கம், 5.77 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உணவுப் பொருட்கள் விலை உயர்வு, மத்திய அரசு ஊழியர் ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால், பணவீக்கம் மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ரிசர்வ் வங்கி, நேற்று முன்தினம் வெளியிட்ட நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யவில்லை.எனினும், நாடு முழுவதும் பெய்து வரும் பருவ மழை, பயிரிடும் பரப்பு அதிகரித்து வருவது போன்றவற்றால், வரும் மாதங்களில் உணவுப் பொருட்கள் உற்பத்தி அதிகரித்து, அவற்றின் விலை, கட்டுக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், ‘இந்தாண்டு இறுதிக்குள், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைக்கும்’ என, பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். கடந்த, 2015, ஜனவரி முதல், இந்தாண்டு ஏப்ரல் வரை, ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை, 1.50 சதவீதம் குறைத்து, 6.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இது, கடந்த ஐந்து ஆண்டுகளில் காணப்படாத குறைந்தபட்ச வட்டி விகிதம்.
தொழில் துறைஇந்தாண்டு, ஜூன் மாதம், தொழில் துறை உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் காணப்பட்டதை விட, 1.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, சிமென்ட், நிலக்கரி உள்ளிட்ட முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி அதிகரித்ததால், சாத்தியமாகியுள்ளது. தொழில் துறை உற்பத்தியில், மூன்றில் ஒரு பங்கை, முக்கிய எட்டு துறைகளை உள்ளடக்கிய அடிப்படை கட்டமைப்பு துறை வழங்கி வருகிறது. இத்துறை, கடந்த ஜூன் மாதம், 5.2 சதவீதம் என்ற அளவில் வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|