பதிவு செய்த நாள்
15 ஆக2016
04:17
பணம் தொடர்பாக கற்றுக்கொண்ட எல்லா நுணுக்கங்களும் தான் செய்த நிதி தவறுகளில் இருந்து பெற்ற பாடங்கள் தான் என்கிறார் தனி நபர் நிதி வல்லுனரான ஜேன் பிரைண்ட் குவின்.
இந்த பாடங்களைக் கொண்டு மற்றவர்களுக்கு வழி காட்டும் வகையில் அவர் எழுதிஉள்ள, ‘மேகிங் தி மோஸ்ட் ஆப் யுவர் மணி’ புத்தகத்தில், நிதி திட்டமிடல் தொடர்பாக அவர் முன்வைக்கும் கருத்துக்கள்:உங்கள் நிதி திட்டம் விருப்ப பட்டியலில் இருந்து துவங்க வேண்டும். விருப்பங்கள் எல்லாவற்றையும் எழுதுங்கள். மனதில் உள்ள ஒவ்வொரு விருப்பத்தையும் பட்டியலிடுங்கள். அவற்றுக்கான பணம் இருக்கிறதா என்பதை இப்போதைக்கு மறந்து விடுங்கள். இவை எல்லாம் நம்மால் முடியாது என நீங்கள் நினைக்கலாம். நிதி திட்டமிடலின் நோக்கம் என்னவெனில், முக்கியமானவற்றை தீர்மானித்து, அதை அடைவதற்கான வழியை உருவாக்குவதாகும்.
ஒரு நோட்டு புத்தகத்தில் அல்லது கம்ப்யூட்டரில் வாழ்க்கை இலக்குகள் என தலைப்பிட்டு அதன் கீழ், எனக்கு வேண்டியவை என வரிசையாக குறித்து வையுங்கள். அதன் பக்கத்தில் அதை எப்போது அடைய விருப்பம் என குறிப்பிடுங்கள். அடுத்ததாக அதற்கான வழி என்ன என்பதை குறிப்பிடுங்கள்.எல்லாவற்றையும் குறித்து வைத்த பின், நிதானமாக யோசித்துப் பாருங்கள். இவை எல்லாம் சாத்தியம் ஆக வேண்டும் என்றால் என்ன தேவை? இதற்காக எவ்வளவு உழைக்க வேண்டும்? இவை உகந்தவை தானா? போன்ற கேள்விகள் எழும்.
இப்போது இன்னொரு பட்டியலை உருவாக்கவும். அதில் தனிப்பட்ட இலக்குகளை குறுப்பிடவும். 30 வயதில் நீங்கள் புத்தகம் எழுத விரும்பலாம். பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட விரும்பலாம். பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாக நீடிக்கலாம். இந்த பட்டியல், ஒவ்வொரு இலக்கும் உங்கள் நிதி நிலையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உணர்த்தும். இது உங்கள் விருப்பங்களில் எவை முக்கியமானவை என தேர்வு செய்ய உதவும்.
இனி, உங்கள் கனவு இலக்குகளுடன், போதுமான காப்பீடு, கடன்களை அடைப்பது, சொந்த வீடு, பிள்ளைகள் கல்வி, ஓய்வு கால நிதி ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான நிதி திட்டமிடல் தயாராகி விட்டது. இதற்கான நிதி வழியை இனி ஆராய வேண்டும். லாட்டரியில் பணம் விழுந்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால், அது சாத்தியமில்லை. உங்கள் வருமானத்திற்குள் வகுக்கப்படும் திட்டமே வெற்றி பெறும். அதில் தான் நீங்கள் சேமித்து முதலீடு செய்ய வேண்டும்.
இதை உங்கள் நிகர மதிப்பை அறிவதில் இருந்து துவங்கலாம். நிகர மதிப்பை அறிவது, உங்கள் கடன் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? முதலீடு சிறப்பாக உள்ளதா? அவசர கால நிதி போதுமானதாக இருக்கிறதா? போன்ற கேள்விகளுக்கு விடையாக அமையும். நிகர மதிப்பை கணக்கிட, உங்கள் வசம் உள்ள பொருட்களை எல்லாம் விற்றால் என்ன கிடைக்கும் என கணக்கிட்டு, கடன் பொறுப்புகளை கழிக்கவும். நிகர மதிப்பை தொடர்ந்து அதிகமாக்குவது தான் உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். பணக்காரராகி கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. பாதுகாப்பான நிலையே முக்கியம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|