பதிவு செய்த நாள்
15 ஆக2016
04:19
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக நீட்டிக்கப்பட்ட அவகாசமும் முடிந்து விட்டது. வருமான வரி சட்டத்தின் படி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதும் அவசியம். எனவே, வருமான வரி விலக்கிற்கு மேல் வருமானம் உள்ள அனைவருமே வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
எனினும், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாமல் தவறவிட்டவர்கள் பலர் இருக்கலாம். இதற்கான காரணம் என்னவாக இருந்தாலும், கெடுவுக்குள் கணக்கு தாக்கல் செய்யத்தவறியவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை, தாமதமாகவும் தாக்கல் செய்யலாம். 2015 – 16ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை, 2018 மார்ச் மாதம் வரை தாக்கல் செய்யலாம். இது, ‘பிலேடெட் ரிடர்ன்’ என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக வருமான வரி கணக்கை உரிய நேரத்தில் தாக்கல் செய்துவிடுவது தான் நல்லது. கெடு காலம் முடிந்த பிறகு தாக்கல் செய்யும் வாய்ப்பு இருந்தாலும், குறித்த காலத்தில் தாக்கல் செய்வதால் கிடைக்க கூடிய சில நன்மைகளை இழக்க வேண்டிஇருக்கும்.
முதல் அணுகூலம், வரித்தாக்கலில் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால், அதை மீண்டும் ஒருமுறை திருத்தம் செய்து தாக்கல் செய்ய முடியும். எனினும், குறித்த காலத்திற்குள் கணக்கை தாக்கல் செய்து இருந்தால் மட்டுமே இது சாத்தியம். தாமதமாக தாக்கல் செய்வோர் இவ்வாறு செய்ய முடியாது. அதே போல, வரி பிடித்தம் செய்யப்பட்ட தொகை திரும்பி செலுத்தப்படுவதாக இருந்தால், அதற்குரிய வட்டியும் சேர்த்து அளிக்கப்படும். கணக்கிடப்படும் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. ஆனால், தாமதமாக தாக்கல் செய்யும் போது இவ்வாறு வட்டி பெற முடியாது.
அது மட்டும் அல்லாமல், வரி பிடித்தம் திரும்பி அளிக்கப்பட வேண்டிய நிலை இருந்தால், அது தாமதமாவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.மேலும், இவ்வாண்டில் ஏற்பட்ட இழப்பை, அடுத்த ஆண்டிற்கு கொண்டு செல்வதும் சாத்தியம் இல்லாமல் போகும். இருப்பினும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதே நல்லது என்பதால், தாமதமாகவேனும் இதை நிறைவேற்றுவது சிறந்தது. ஆனால், தவறுகளை திருத்தும் வாய்ப்பு இல்லாததால், விண்ணப்பத்தில் தகவல்களை இடம்பெறச் செய்யும்போது, தவறு ஏற்படாமல் இருப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பிறகு, ‘வெரிபிகேஷன்’ செயல்முறையையும் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பம் தாக்கல் செய்ததற்கான ஏற்பு, வருமான வரித்துறைக்கு சென்று விட்டதா என, உறுதி செய்து கொள்ள வேண்டும். தாமதமாக தாக்கல் செய்பவர்கள், ஒருவேளை வருமான வரி செலுத்த வேண்டிய நிலை இருந்தால், முதலில் வரித்தொகையை உரிய காலத்தில் செலுத்தி விட்டு, அதன் பின் முடியும்போது கணக்கை தாக்கல் செய்யலாம். இதன் மூலம் அபராதத்தை தவிர்க்க முடியும். அடுத்த கணக்கீடு ஆண்டு முதல் தாமதமாக வரித்தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2 ஆண்டில் இருந்து ஓராண்டாக குறைக்கப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|