பதிவு செய்த நாள்
15 ஆக2016
04:19
சிறு முதலீட்டாளர்கள், அரசு வெளியிடும் பத்திரங்களில் நேரடியாக பங்கேற்பதை எளிதாக்க, ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கை இப்பிரிவில் ஆர்வத்தை ஏற்படுத்துமா?
முதலீட்டு பரப்பில் அரசு பத்திரங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. முதலீட்டு சாதனங்கள் பற்றி விவாதிக்கப்படும் போதெல்லாம் அரசு பத்திரங்கள் தவறாமல் குறிப்பிடப்படுகின்றன. பாதுகாப்பானவை, நீண்ட கால நோக்கில் நிலையான வருமானம் தருபவை உள்ளிட்ட அரசு பத்திரங்களின் சாதகமான அம்சங்களாக அமைகின்றன. எனினும், இதுவரை பெரும்பாலும் வங்கிகள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், நிதி கழகங்கள், காப்பீடு நிறுவனங்கள் ஆகியவையே அரசு பத்திர முதலீட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சிறு முதலீட்டாளர்களை பொறுத்தவரை நேரடி பங்கேற்பு அதிகம் இல்லாமல், மற்ற திட்டங்கள், மியூச்சுவல் பண்ட்கள் போன்றவை மூலமே இவற்றில் மறைமுகமாக முதலீடு செய்யும் நிலை உள்ளது. இவற்றின் சிக்கலான நடைமுறை உள்ளிட்ட பல அம்சங்கள் இதற்கு காரணமாக அமைகின்றன.
புதிய வாய்ப்புஎனினும், அரசு பத்திரங்களில் சில்லரை அல்லது சிறு முதலீட்டாளர்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே சிறு முதலீட்டாளர்கள், அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதை சாத்தியமாக்கியுள்ள நிலையில், இவற்றில் நேரடியாக பரிவர்த்தனை செய்வதை மேலும் எளிதாக்கும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி என்.எஸ்.டி.எல்., மற்றும் சி.டி.எஸ்.எல்., ஆகிய அமைப்புகளிடம், ‘டிமெட்’ கணக்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் அனைவரும் ரிசர்வ் வங்கியால் நிர்வகிக்கப்படும் என்.டி.எஸ்., – ஓ.எம்., மேடை வாயிலாக அரசு பங்குகளை நேரடியாக வாங்கி, விற்க வழி செய்யப்பட்டுள்ளது. கணக்கு வைத்துள்ள வங்கிகள் மூலம் இதை மேற்கொள்ளலாம். வரும், ஆகஸ்ட் 16ம் தேதி முதல் இதற்கான நடைமுறை அமலுக்கு வருகிறது.
அரசு பத்திரங்கள் அரசுக்கு தேவையான நிதி திரட்ட, அரசு சார்பில், ரிசர்வ் வங்கி மூலமாக பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. குறுகிய கால அளவிலானவை, ‘டிரஷரி பில்’ஸ் எனப்படுகின்றன. இவைத்தவிர, 30 ஆண்டு கால அளவிலான பத்திரங்கள், ‘கவர்மென்ட் செல்யூரிடிடீஸ்’ எனப்படுகின்றன. இவற்றில் நிதி கழகங்கள், வங்கிகள் உள்ளிட்டவை முதலீடு செய்கின்றன. இந்த பத்திரங்களை பரிவர்த்தனை செய்யவும் முடியும். ஆனால், இதுவரை சிறு முதலீட்டாளர் இவற்றில் பி.பி.எப்., உள்ளிட்ட திட்டங்கள் மூலமே மறைமுகமாக பங்கேற்கும் நிலை உள்ளது.
இந்நிலையில், சிறு முதலீட்டாளர்கள் நேரடி பங்கேற்பை ஊக்குவிக்கும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை, பொதுவாக வரவேற்க தக்கது என்பதே பரவலான கருத்தாக அமைகிறது. ஏனெனில், இது சிறு முதலீட்டாளர்களுக்கு, நீண்ட கால முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. தற்போது வங்கி டிபாசிட்கள் போன்றவை தவிர சிறு முதலீட்டாளர்களுக்கு, நீண்ட கால முதலீட்டு வாய்ப்புகள் இல்லை. ஆனால், டிபாசிட்களுக்கு கால வரம்பு உண்டு. அரசு பத்திரங்களில், 10 முதல் 30 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். எனவே, ஓய்வூதியதாரர்களுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது. அரசு பத்திரங்கள் அளிக்கும் வருவாய், நீண்ட கால நோக்கில் டிபாசிட் மூலமான வருவாயை விட அதிகமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
சவால்கள்ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை, அரசு பத்திரங்களை சிறு முதலீட்டாளர்கள் வாங்கி, விற்பதை எளிதாக்கும் வகையில் அமைந்தாலும், நடைமுறையில் இதில் பல சிக்கல்கள் நீடிக்கவே செய்கின்றன. இந்த பரிவர்த்தனையை, வங்கிகள் மற்றும் முதன்மை டீலர்கள் மூலமே மேற்கொள்ள முடியும். இப்போதைக்கு ஐ.டி.பி.ஐ., வங்கி மட்டும் தான் சிறு முதலீட்டாளர்களுக்கு இந்த வசதியை அளிக்கிறது. மேலும், பல பொதுத்துறை வங்கிகள் இதை வழங்கத்துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், சிறு முதலீட்டாளர்கள் விரும்பிய அளவில் பரிவர்த்தனை செய்ய வழி செய்யப்பட்டிருப்பது சாதகமான அம்சமாகும்.
அரசு பத்திரங்களை நேரடியாக வாங்கி விற்பதற்கான வாய்ப்பு சிறந்ததாக கருதப்பட்டாலும், இதன் தன்மையை முதலீட்டாளர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என நிதி ஆலோசகர்கள் கருதுகின்றனர். முதலில் அரசு பத்திரங்களின் செயல்பாடு சிக்கலானது என்கின்றனர். னினும், சிறு முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களில் நேரடியாக பங்கேற்பதற்கான வாய்ப்பு, நல்ல முன்னேற்றம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. சிறு முதலீட்டாளர்களின் நீண்ட கால முதலீட்டு வாய்ப்பை இது மேலும் பரவலாக்கும் தன்மை கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|