பதிவு செய்த நாள்
18 ஆக2016
07:09
புதுடில்லி : ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கான சில விதிமுறைகளை, மத்திய வர்த்தக அமைச்சகம் தளர்த்தியுள்ளது.
இதன்படி, ஏற்றுமதி மண்டல நிறுவனங்கள், மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள், மின்னணு வன்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் ஆகியவற்றுக்கு, கட்டாயம் கிடங்கு வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு உள்ளது.
வரி சலுகைகள்:மேலும், இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் மின்னணு வன்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் ஆகியவற்றில் உள்ள நிறுவனங்கள், ஏற்றுமதி மண்டல நிறுவனங்கள் பிரிவிற்கு மாறினாலோ அல்லது இணைந்தாலோ, வரிச்சலுகைகள் பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுபோல, ஏற்றுமதி மண்டலங்களில் உள்ள நிறுவனங்கள், பிற பிரிவுக்கு மாறினாலோ அல்லது இணைந்தாலோ, வரிச் சலுகைகள் நீடிக்கும் என, கூறப்பட்டுள்ளது.
ஏற்றுமதி மண்டலங்களில் உள்ள, விவசாயம், மீன் வளர்ப்பு, தோட்டக்கலை, கோழிப்பண்ணை நிறுவனங்கள், குறிப்பிட்ட சரக்குகளை, வரையறுக்கப்பட்ட எல்லையை தாண்டி கொண்டு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 1980ல், ஏற்றுமதி மண்டல திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மண்டலங்களில் உள்ள நிறுவனங்கள், ஏற்றுமதியில் கிடைக்கும் லாபத்தில், 100 சதவீத வரிச் சலுகை பெறலாம்; மூலப் பொருட்களை சுங்க வரியின்றி இறக்குமதி செய்யலாம்.
ஏற்றுமதியை ஊக்குவிக்க...இந்த வரிச்சலுகைகள், 2010, மார்ச்சில் ரத்து செய்யப்பட்டன. அத்துடன், குறைந்தபட்ச மாற்று வரி விகிதமும் அமலானது. இதன் காரணமாக, ஏற்றுமதி மண்டலங்களில், தொழிற்சாலைகள் அமைப்பது குறைந்தது. இந்நிலையில், 19 மாதங்களாக சரிவடைந்து வந்த நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஜூன் மாதம், வளர்ச்சி கண்டது; ஜூலையில், மீண்டும் சரிவடைந்தது. அதனால், ஏற்றுமதியை ஊக்குவிக்க, விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|