பதிவு செய்த நாள்
20 ஆக2016
01:05
புதுடில்லி:'பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவில், புதிய கண்டுபிடிப்புகள், தீர்வுகள் ஆகியவற்றுக்கான ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்களை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன' என, ஸின்னோவ் மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. அதன் விபரம்:இந்தியாவில், மென்பொருள், வாகனம், இயந்திரமயமாக்கல் தொழில் போன்ற உயர் தொழில்நுட்ப துறைகளில், 900க்கும் அதிகமான பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன.
இவை, மின்னணு துறைக்கான, 'செமி கண்டக்டர்' வடிவமைப்பு, நவீன ஆரோக்கிய பராமரிப்பு சாதனம், குறைந்த அலைவரிசையில் இயங்கும் தொலைத்தொடர்பு கருவிகள், ஓட்டுனர் இல்லாத கார்களுக்கான தானியங்கி சாதனங்கள் உட்பட, பல்வேறு தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, ஏராளமான நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை அமைத்துள்ளன. அவற்றில், இந்தாண்டு ஏப்ரல் நிலவரப்படி, பெங்களூரில் மட்டும், 500 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பான்மையானவை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானவை. இந்தியாவில், குறைந்த ஊதியத்தில், திறமையான தொழில்நுட்ப வல்லுனர்கள் கிடைக்கின்றனர். இதர நாடுகளை விட, ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான செலவும் குறைவாக உள்ளது.
இதன் காரணமாக, பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. வெளிநாடுகளில் உள்ள பல நிறுவனங்கள், அவற்றின் பணியாளர்களை குறைத்து விட்டு, இந்திய மையங்களில், பணியாளர்களை அதிகரித்து வருகின்றன.பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேச சந்தைகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் தீர்வுகளுக்காகவே, இந்தியாவில் ஆய்வு மையங்களை அமைக்கின்றன.
இந்நிலையில், இந்தியாவிலும், பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களுக்கான தேவை, பயன்பாடு ஆகியவை பெருகி வருவதால், பன்னாட்டு நிறுவனங்களின் கவனம், தற்போது உள்நாட்டு சந்தையின் பக்கமும் திரும்பியுள்ளது. அந்நிறுவனங்களின், புதிய பொருட்களை சோதித்து பார்க்கும் தளமாகவும், இந்தியா மாறியுள்ளது. உதாரணமாக, வாடகை கார் சேவைக்கு,'கிரெடிட் கார்டு' வாயிலாக மட்டுமே பணம் வசூலிக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த ஊபர் நிறுவனம், இந்தியாவில், ரொக்கப் பணத்திற்கு சேவை வழங்க வேண்டிய நெருக்கடியை சந்தித்தது. அதற்கான தீர்வுகளை அமல்படுத்தி, வெற்றி கண்ட பின், தற்போது, வியட்னாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலும், ரொக்கப் பரிவர்த்தனை சேவையை, ஊபர் துவக்கியுள்ளது.
இதுபோல, கூகுள், ஆப்பிள், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களும், இந்திய சந்தையை நோக்கி, அவற்றின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு திட்டங்களை அமைத்து வருகின்றன. இது, ஏராளமான வேலைவாய்ப்புக்கும் வழிவகுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|