பதிவு செய்த நாள்
23 ஆக2016
11:41
மலேஷியாவில் இருந்து அதிக அளவு பாமாயிலை, சீனா கொள்முதல் செய்வதால், தமிழகத்தில் பாமாயில், லிட்டருக்கு, 10 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், பிற எண்ணெய் வகைகளின் விலைகளும் உயரும் என, வியாபாரி கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சேலம் மாவட்ட தாவர எண்ணெய் விற்பனையாளர்கள் சங்க தலைவர் சந்திரகாசன் கூறியதாவது: இந்தியாவுக்கு தேவையான பாமாயில், 75 சதவீதம் மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது, மலேஷியாவில் இருந்து, அதிக அளவில் பாமாயிலை சீனா கொள்முதல் செய்து வருகிறது. மலேஷியாவில், பாமாயிலுக்கு ஏற்பட்டுள்ள செயற்கை தட்டுப்பாடு காரணமாக, அதன் விலை உயர்ந்து உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில், கடந்த வாரம் லிட்டர், 57 ரூபாய்க்கு விற்ற பாமாயில், 67 ரூபாயாக அதிகரித்துள்ளது.
15 லிட்டர் டின், 855 ரூபாய்க்கு விற்றது, 1,000 ரூபாயாக அதிகரித்து உள்ளது. சூரியகாந்தி எண்ணெய் விலையும், லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் விலையிலும் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு, 'ஆன்லைன்' வர்த்தகமும் காரணம். எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்ளை, ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நீக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பட்சணங்கள்...: விநாயகர் சதுர்த்தி, ஓணம், நவராத்திரி, தீபாவளி என, பண்டிகைகள் வரிசை கட்டும் நிலையில், எண்ணெய் விலைகளில் உயர்வு ஏற்பட்டுள்ளது, ஸ்வீட் ஸ்டால் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இனிப்பு, கார பட்சணங்கள், உணவுப் பண்டங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|