பதிவு செய்த நாள்
03 செப்2016
03:17
புதுடில்லி : ‘இந்திய ரசாயன சந்தையின் மதிப்பு, 2020ல், 15 லட்சம் கோடி ரூபாயாக உயரும்’ என, டாடா ஸ்ட்ரடஜிக் மேனேஜ்மென்ட் குழுமத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இக்குழுமம், ரசாயனங்கள் துறை குறித்த, ‘இந்தியா கெம் – 2016’ என்ற ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது. இதை, டில்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்த குமார் வெளியிட்டார்.
அறிக்கை விபரம்: இந்திய ரசாயன துறையின் சந்தை மதிப்பு, தற்போது, 14,700 கோடி டாலர், அதாவது, 9.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. சர்வதேச ரசாயன சந்தையில், இந்தியாவின் பங்களிப்பு, மூன்று சதவீதம் என்றளவில் உள்ளது. இந்தியாவில், 80 ஆயிரத்திற்கும் அதிகமான ரசாயனங்கள் புழக்கத்தில் உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ரசாயன துறையின் பங்களிப்பு, 15 சதவீதமாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, ரசாயன துறை முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இத்துறையின் வளர்ச்சிக்கு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பு வகை ரசாயனங்கள், மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்ப துறைகளுக்கான ரசாயனங்களுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அரசும், ஒழுங்குமுறை அமைப்புகளும் இணைந்து செயல்படும்பட்சத்தில், இந்திய ரசாயன துறையின் உண்மையான ஆற்றல் வெளிப்படும். மத்திய அரசின், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்திற்கு வரவேற்பு பெருகி வருகிறது. இதன் மூலம், ஏராளமான முதலீடுகள், புதுமையான கண்டுபிடிப்புகள், அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன. இது, இந்திய ரசாயன துறை மேலும் வளர்ச்சி காண துணை புரியும்.
அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ள, சரக்கு மற்றும் சேவை வரி, ரசாயன துறையின் வளர்ச்சிக்கு உதவும். பலமுனை வரிகள் முடிவிற்கு வருவதும், சரக்கு போக்குவரத்து செலவு குறைய உள்ளதும், ரசாயன துறைக்கு ஊக்கமளிக்கும். அனைத்து தொழில்களுக்கும், ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குதல், தொழிலாளர் மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டங்களில் சீர்திருத்தங்கள் ஆகியவையும், ரசாயன துறை எழுச்சி காண உதவும். இதன் காரணமாக, இந்திய ரசாயன துறை, வரும், 2020ல், 22,600 கோடி டாலர், அதாவது, 15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|