பதிவு செய்த நாள்
07 செப்2016
07:37
புதுடில்லி : ‘இந்தியாவில், பெருகி வரும் மக்களின் தேவையால், சமீப ஆண்டுகளாக, நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும் நடுத்தர நிறுவனங்கள், மிகச்சிறப்பான ஆதாயம் அடைந்து வருகின்றன’ என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பும், பி.டபிள்யு.சி., நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வறிக்கை விபரம்:இந்தியாவில், வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பல்வேறு பணிகளுக்குச் சென்று, பணம் ஈட்டுவோரின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதன் காரணமாக, மக்கள், அவசிய செலவுகள் போக, இதர பொருட்கள் வாங்க அதிகம் செலவிடுகின்றனர். இத்தகைய போக்கால், இந்திய நுகர்வோர் சந்தை விரிவடைந்து, அத்துறையில் உள்ள, ஏராளமான நடுத்தர நிறுவனங்களுக்கு, பிரமாதமான வர்த்தக வாய்ப்புகளை வழங்கி வருகிறது. நுகர்வோர் பொருட்கள் சந்தையில், பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு மிகுதியாக உள்ள போதிலும், போட்டியை சமாளிக்கக் கூடிய அணுகுமுறையால், நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி கண்டு வருகின்றன.
உதாரணமாக, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டு வந்த போது, நடுத்தர நிறுவனங்கள் உடனுக்குடன், நுகர்வோர் பொருட்களின் விலையை குறைத்து, விற்பனையை அதிகரித்தன. இது, பெரிய நிறுவனங்களின் விற்பனை அளவை பாதித்தது. அதேசமயம், இதே அணுகுமுறையை, நடுத்தர நிறுவனங்கள், நிலையாக, நீண்ட காலத்திற்கு கடைபிடிக்க முடியாது. விரிவடைந்து வரும் சந்தையில், வலுவாக காலுன்ற வேண்டும். அதற்கு, பெரிய நிறுவனங்களைப் போல, கிராமப்புற சந்தைகளிலும் வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டும்.
இந்திய மக்கள்தொகையில், 68 சதவீதம் பேர் கிராமங்களில்வசிக்கின்றனர். அதன் காரணமாகவே, பெரிய நிறுவனங்கள், கிராமப்புறங்களில் வலுவான விற்பனை ஒருங்கிணைப்பிற்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்த போட்டியை சமாளிக்க, நடுத்தர நிறுவனங்களால் முடியாது. அதனால், அவை வேறு வழிகளில், கிராமப்புற வர்த்தகத்தை வளைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.ஒரே நோக்கில், வர்த்தக செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். கிராமப்புற நுகர்வோரை எளிதில் சென்றடையும் வகையில், பொருட்களின் வினியோக முறை, விலை உள்ளிட்ட அம்சங்களில் இலக்குடன் செயல்பட்டால், மேலும் வளர்ச்சி காணலாம்.
தற்போது, மக்கள் ஆரோக்கிய பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இயற்கை பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இது போல உருவாகும் புதிய சந்தைகளை குறிவைத்து, நடுத்தர நிறுவனங்கள், தங்களின் வணிக நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டால், வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கணினி, லேப் – டாப், ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்கள் மூலம், 65 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். வரும், 2020ல், 25 கோடி பேர், ஆன்லைன் வாயிலாக பொருட்களை வாங்குவர் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கேற்ப, விரிவடையும் நுகர்வோர் பொருட்கள் சந்தையை, நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள, புதிய உத்திகள் அவசியம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|