பதிவு செய்த நாள்
12 செப்2016
00:33
தேர்வு செய்ய அளவுக்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பது, சிறந்ததை அளிப்பதை விட சிக்கலை தான் உண்டாக்குகிறது என்கிறார், பேரி ஷ்வார்ட்ஸ். நவீன வாழ்க்கையின் இந்த சிக்கல் பற்றி, ‘தி பாரடாக்ஸ் ஆப் சாய்ஸ்: ஒய் மோர் ஈஸ் லெஸ்’ எனும் புத்தகத்தில் ஆய்வுக்குள்ளாக்கி, அதற்கான தீர்வுகளை வழங்குகிறார். ஜவுளிக்கடையில் ஒரு ஜீன்ஸ் வாங்கச்சென்ற போது, எந்த வகையான ஜீன்ஸ் வேண்டும், எந்த அளவில் வேண்டும், எந்த அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்று வரிசையாக கேள்விகள் கேட்கப்பட்டு திணறடிக்கப்பட்ட அனுபவத்தில் இருந்து தன் புத்தகத்தை துவக்கும் ஷ்வார்ட்ஸ், வாய்ப்புகளில் இருந்து விடுபடும் வழியை விவரிக்கிறார். எல்லாவற்றிலும் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டியதில்லை. வழக்கமான பொருட்களை எல்லாம் அதிகம் யோசிக்காமல் வாங்கலாம். அளவுக்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பது முடிவெடுப்பதை சிக்கலாக்குகிறது.பலருக்கு அதிக வாய்ப்புகள் வேண்டும் என்றாலும், பலர், வாழ்க்கை எளிமையாக இருப்பதையே விரும்புகின்றனர். கல்லுாரி படிப்பு, திருமணம், வேலை போன்றவற்றில் வாய்ப்புகள் தேவை; ஆனால், முடிவில்லாத வாய்ப்புகள் திருப்தி அளிப்பதில்லை. நமக்கு என்ன வேண்டும் என்று தெளிவாக தெரிவதில்லை; நம் முன் இருக்கும் தகவல்களை எல்லாம் எப்படி அலசி புரிந்து கொள்வது என்பதும் தெரிவதில்லை; இதனால் சரியான முடிவு எடுக்க முடியாமல் போகிறது. ஆக, முக்கியம் என்ன என்றால், அதிகமாக்கலுக்கு விரும்பாமல், திருப்தியாளராக இருக்க வேண்டும். அதிகமாக்க விரும்புவது என்பது எல்லாவற்றிலும் சிறந்ததையே நாடும் முழுமை வாதத்தை விட மோசமானது. இவர்கள் எப்போதுமே சிறந்ததை தேடிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால், அவற்றை கண்டடைவதே இல்லை. மாறாக திருப்தியாளர்கள் தாங்கள் எதிர்பார்ப்பது கிடைத்தால் மகிழ்ச்சி அடைகின்றனர்.வாய்ப்புகளை தேர்வு செய்ய, குறைவான நேரமே ஒதுக்க முடிவது, சரியான முடிவை மேற்கொள்வதை சிக்கலாக்கி மகிழ்ச்சியை குறைக்கிறது. சில நேரங்களில் நாம் மேற்கொள்ளும் தேர்வுகளும் போதுமானதாக இருப்பதில்லை. தேர்வு செய்த பிறகு, மற்ற வாய்ப்புகளை பார்த்து ஏமாற்றம் அடைகிறோம். எல்லாவற்றையும் மற்றவர்கள் வைத்துள்ளவற்றுடன் ஒப்பிட்டு பார்ப்பது தான் பிரச்னை. ஒப்பீடு, குறிப்பாக சமூக ஒப்பீடு திருப்தியில் இருந்து விலக்குகிறது. எனவே, நாம் எதை தேர்வு செய்வது என்பதை தேர்வு செய்ய வேண்டும். முக்கியமானவற்றை தேர்வு செய்ய நேரம் செலவிடுங்கள். முக்கியமற்றவற்றில் வாய்ப்புகளில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். வாய்ப்புகளில் இருந்து தேர்வு செய்யாதீர்கள். தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுங்கள். அதிகமாவதை நாடாமல் திருப்தியை நாடுங்கள். எப்போதும் நன்றி உணர்வு கொண்டிருங்கள். நீங்கள் நன்றி கொள்ளக்கூடிய ஐந்து விஷயங்களை தினமும் பட்டியலிடுங்கள். வருத்தப்படுவதை குறைத்துக் கொள்ளுங்கள். மாற்றத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருங்கள். தற்போதுள்ள நல்ல விஷயங்களில் மனதை செலுத்துங்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|